கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் திடீர் விபத்து.. லாரி மோதியது.. என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி 12ம் வகுப்பு மாணவியின் உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் திடீரென்று சாலை விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்தார்.
கடந்த 13ம் தேதி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக பள்ளி நிர்வாகம் கூறியது. ஆனால் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் கூறினர்.

பள்ளியில் வெடித்த வன்முறை
மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் வன்முறையானது. பள்ளி சூறையாடப்பட்டது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதால் போராட்டம் வன்முறையானது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரதே பரிசோதனை முடிவடைந்த பிறகும் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்ததோடு சட்ட போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மாணவியின் உடல் ஒப்படைப்பு
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இன்று காலை 6.55 மணியளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்று கொண்டனர். கதறி அழுது கண்ணீருடன் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொண்டனர்.

விபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்
இதையடுத்து உளுந்துர் பேட்டை நெடுஞ்சாலையில் வேப்பூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. 80 முதல் 100 கிமீ வேகத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆம்புலன்ஸ் வாகனம் சிறுவிபத்தில் சிக்கியது. அதாவது ஆம்புலன்ஸ், கான்வாய் வாகனம், லாரி ஆகியவை மோதி கொண்டன. இதில் ஆம்புன்ஸ் வாகனத்தின் முன்பகுதி லேசாக சேதமடைந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதால் அதே ஆம்புலன்ஸில் மாணவியின் உடல் எடுத்து செல்லப்பட்டது.

போலீஸ் குவிப்பு
மாணவியின் பெரியநெசலூர் கிராமத்துக்கு புறப்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊர் நுழைவு பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாணவியின் இறுதிசடங்கில் வெளியூர் மக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் இறுதி சடங்குகளை நிறைவேற்ற கூறியுள்ளதால் பெரியநெசலூர் கிராமத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications