மற்றதை விடுங்க.. திட்டக்குடி தொகுதியை பாருங்க.. திமுகவுக்கு பாஜக வைத்த "செக்.." தகிட தகிட "தடா"
கடலூர்: கோவை தெற்கு தொகுதியில் பாஜக ஜெயிக்குமா.. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக ஜெயிக்குமா அல்லது தோற்குமா.. என்று அரசியல் வல்லுநர்கள் ஆரூடம் கணித்தபடி இருக்கின்றனர்.
ஆனால்.. சத்தமே இல்லாமல் திட்டக்குடி சட்டசபைத் தொகுதியில் பாஜக முக்கியமாக ஒரு மூவ் எடுத்து வைத்துள்ளது. இது திமுகவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திட்டக்குடி தொகுதி. கன்னியாகுமரி மாவட்டம் போலவோ அல்லது கோவை சுற்றுவட்டாரப் பகுதி போலவோ பாஜக பெரிய அளவில் பலம் இல்லாத தொகுதிதான் இது. எனவே தான் அதிகம் பேர் இந்த தொகுதி பாஜக வேட்பாளர் பற்றி கவனிக்க மறந்து விட்டனர். ஆனால் கட்சியை தாண்டி இங்கே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் தடா பெரியசாமி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போராளி
இதற்கு முக்கியமான காரணம் தடா பெரியசாமி பட்டியல் இன மக்களுக்கான பெரும் போராளியாகவும், தற்போது பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவி வகிக்கிறார். பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை மீட்பதற்காக மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற அமைப்பை தடா பெரியசாமி நடத்திவருகிறார்.

அமைப்புகள்
அது மட்டும் கிடையாது நந்தனார் சேவாசிரம அறக்கட்டளை என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இவை அனைத்துமே தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடக்கூடிய அமைப்புகள் ஆகும். திமுக கட்சி தலைமை அலுவலகம் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளது பஞ்சமி நிலத்தில்தான் என்று திட்டவட்டமாக கூறியவர் தடா பெரியசாமி. திமுக தரப்பில் வெளியிடப்பட்ட பத்திரம் போலியானது என்றும் கூறி திமுக தலைமைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தவரும் இந்த தடா பெரியசாமிதான்.

பிரச்சார வியூகம்
திட்டக்குடி தொகுதியில் இவரது முக்கியமான பிரசார வியூகம் தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் திமுகவுக்கு செல்லவிடாமல் தடுப்பதுதான். பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துள்ள திமுகவுக்கா நீங்கள் ஓட்டு போடப்போகிறீர்கள் என்பது இவரது பிரச்சாரத்தின் முக்கிய அஜெண்டா என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

போராளி தடா பெரியசாமி
திமுகவில் 2006 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றிபெற்று தற்போது சிட்டிங் எம்எல்ஏ வாகவும் இருக்கும் கணேசன் மறுபடி போட்டியிடுகிறார். இவருக்கு தடா பெரியசாமி மிகப்பெரிய தடையாக இருப்பார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தடா பெரியசாமி பற்றிய மற்றொரு முக்கியமான தகவல் ஒன்று உண்டு. அதாவது.. மக்கள் உரிமைகளுக்காக நக்சல்பாரி அமைப்பில் இணைந்து போராட்டம் நடத்தியவர் இவர். இதன்காரணமாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தூக்கு தண்டனை வரை சென்று அதிர்ஷ்டவசமாக தப்பியவர்தான் தடா பெரியசாமி. எனவே, ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. இதனால்தான் திட்டக்குடி தொகுதி மீது அனைத்து தரப்பு கவனமும் சென்றுள்ளது.

அரசியல் வரலாறு
1983ம் ஆண்டு தமிழ்நாடு விடுதலைப் படை இயக்கத்தில் இணைந்த தடா பெரியசாமி, 1990ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். 2002ல் விசிகவில் இருந்து விலகி 2003ல் பாஜகவில் இணைந்தாா். சமூக சேவை, கல்விக்காக பல விருதுகள் பெற்றுள்ளார். இவா், 1992ம் ஆண்டு திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்க்கப்பட்ட வழக்கில் தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் இருந்தாா் என்பதால்தான், இவரது பெயருக்கு முன்னால் தடா என்ற பெயர் ஒட்டிக் கொண்டுள்ளது. இந்த வழக்கில் 2014ம் ஆண்டு விடுதலையானாா் பெரியசாமி.

தேர்தல் வரலாறு
1999ல் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளராக சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர் 2001ல் திட்டக்குடி சட்டசபை தொகுதியில் தோற்றிருந்தார். 2004ல் பாஜக சாா்பில் சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006ல் பாஜக சாா்பில் வரகூா் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் பஞ்சமி நில விவகாரத்தில் இவரது செல்வாக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. எனவே முந்தைய வரலாறுகளை மாற்றி வெற்றிக் கொடியை நாட்டுவேன் என உறுதியாக கூறுகிறார், தடா பெரியசாமி.












Click it and Unblock the Notifications