தலைமை அறிவிப்பதற்கு முன் கடலூரில் போட்டி என பேஸ்புக்கில் அறிவிப்பு.. குமரவேலின் விலகலை ஏற்ற மநீம!
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுவதாக சி.கே.குமரவேல் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் மக்கள் செல்வாக்கு கொண்டவர் குமரவேல். இவர் மக்கள் நீதி மய்யத்தின் கடலூர்- நாகை பொறுப்பாளராக இருந்தார்.
இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் நடத்தி வந்த வேட்பாளர் நேர்காணலில் தேர்வு குழுவுடன் பங்கேற்றிருந்தார். அப்போது அண்மையில் கட்சியில் இணைந்த கோவை சரளாவுடனும் மநீம துணை தலைவர் டாக்டர் மகேந்திரனுடனும் குமரவேலுக்கு நேற்று கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

மக்கள் நீதி மய்யம்
இதையடுத்து குமரவேல் விலகல் கடிதத்தை கட்சி அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டதாக தெரிகிறது. குமரவேலின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

நேர்காணல்
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

பேஸ்புக்கில் வெளியீடு
அந்த நேர்காணல் முடிவு பெறாத வேளையில் சி.கே. குமரவேல் சமூகவலைதளங்களில் குறிப்பாக பேஸ்புக் பக்கத்தில் அவர் கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளார்.

முரணானது
கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிக்காது. ஜனநாயக முறைப்படி, வேட்பாளர் விருப்பமனு பெறப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இன்னும் பல நூறு மனுதாரர்கள் தங்களின் நேர்காணலுக்காக காத்திருக்கும் சூழலில் நேர்காணலுக்குக் கூட வராமல் தான் தேர்தலில் போட்டியிடுவதாக குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல்.

ஏற்பு
இதுகுறித்து குமரவேலிடம் விளக்கம் கேட்டும் அவர் அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இல்லை. தலைமை அறிவிப்பதற்கு முன்னரே தன்னைத்தானே வேட்பாளராக வெளிப்படுத்திக் கொள்வது கட்சிக் கட்டுப்பாட்டிற்கு முரணாண ஒரு செயல் என்பதே கட்சியின் நிலைப்பாடு. இதனால் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications