தலைக்கேறிய கஞ்சா போதை.. அம்மானு கூட பாராமல் அடித்து கொன்ற கொடூர மகன்! அலறிய கடலூர்
கடலூர்: கஞ்சா போதையில் பெற்ற தாயை அடித்து கொலை செய்த கொடூரன், சடலத்தை வீட்டிற்குள்ளேயே புதைத்த சம்பவம் கடலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்கள் சாராய கடைகளை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தினர். இன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் நீடிக்கின்றன. ஆனால் சாராய கடைகளை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் உக்கிரமானவை. காரணம் அது ஏற்படுத்திய கொடூரங்கள்தான். பாக்கெட் சாராயங்களை குடிப்பதனால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் குடிபோதையில் தரும் இன்னல் மிகவும் கொடூரமாக இருக்கும்.

ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது. இளைஞர்கள் கல்வி நிலையங்களை நோக்கி வெகுவாக நகர்ந்திருக்கிறார்கள். முன்பு இருந்ததை போல குடிபழக்கம் அதி தீவிரமாக இப்போது இருப்பதில்லை. அல்லது குடிபோதையேறிய ஆண்களால் பெண்கள் சந்திக்கும் இன்னல் ஓரளவு குறைந்திருக்கின்றன. ஆனால் இதை நினைத்து பெருமூச்சு விடுவதற்குள் கஞ்சா போதை ஒட்டுமொத்த சமூகத்தின் மூச்சு குழலையே நெறித்துவிடுகிறது.
அப்படிப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்றுதான் கடலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அதாவது கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொளர் கிராமத்தில் 21 இளைஞன் சேவாக் தனது தாயுடன் வசித்து வந்திக்கிறார். இவர் கடந்த சில நாட்களாக கஞ்சா போதைக்கு அடிமையாகியிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இப்படி இருக்கையில் 2 தினங்களுக்கு முன்னர் இவருடைய தாய் கஸ்தூரி திடீரென காணாமல் போயுள்ளார்.
உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் கஸ்தூரியை எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் மகன் சேவாக்கிடம் விசாரித்தனர். சேவாக் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார். மட்டுமல்லாது பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. வீட்டை திறந்து பார்த்தபோது சுவரில் பல்வேறு இடங்களில் ரத்த கறை ஏற்பட்டிருக்கிறது.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சேவாக், தனது தாய் கஸ்தூரியை அடித்து கொலை செய்து, சடலத்தை வீட்டிற்குள்ளேயே புதைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வருவாய் துறையினரின் உதவியுடன் கஸ்தூரியின் உடலை தோண்டி எடுத்த போலீசார் அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
மகன் சேவாக் மீது கொலை, குற்றத்திற்கான தடயங்களை அழித்தல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். பெற்ற தாயையே கஞ்சா போதையில் 21 வயது மகன் அடித்து கொலை செய்து, சடலத்தை வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாராயக்கடைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட நெடும் போராட்டத்தை போல கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராகவும் குரல் எழுப்ப வேண்டி இருக்கிறது என சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications