கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்ட வேண்டாம்.. பெற்றோருக்கு நீதிமன்றம் காட்டம்
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அவரது உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்ட வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 17 வயது மாணவி உயிரிழந்து 8 நாட்களாகியும் அவரது உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ளவில்லை. மறு உடற்கூராய்வு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இரு தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார்.
மறு உடற்கூராய்வு முடிந்தவுடன் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மாணவிக்கு உடற்கூராய்வு செய்த போது அவரது பெற்றோருக்கு மருத்துவக் குழு அழைப்பு விடுத்தும் அவர்கள் வரவில்லை.

உடற்கூராய்வு
எனினும் உடற்கூராய்வு செய்யப்பட்டு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் உடலை தங்கள் தரப்பு மருத்துவரை கொண்டு மறுஉடற்கூராய்வு செய்ய வேண்டும் என மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரியிருந்தார்.

உச்சநீதிமன்றம்
ஆனால் உயர்நீதிமன்றத்தில் முறையிடுங்கள் என கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கு நேற்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகலை இன்று சமர்ப்பிக்க பெற்றோர் தரப்புக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு விசாரணை
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. உச்சநீதிமன்ற நகலை மாணவியின் பெற்றோர் தரப்பு நீதிபதி சதீஷ்குமாரிடம் ஒப்படைத்தது. அப்போது தடயவியல் துறை சார்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில், இரு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போதும் அவை வீடியோ பதிவாக எடுக்கப்பட்டது.

மறுபிரேத பரிசோதனை
மறு பிரேத பரிசோதனையில் எந்த புதிய விஷயமும் தெரியவில்லை என்றனர். இதையடுத்து நீதிபதி சதீஷ்குமார் பேசுகையில், மாணவியின் இறப்பால் வாடும் பெற்றோர் மீது இந்த நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெறாதது ஏன், நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற்றுக் கொள்வதில் ஏன் செய்கிறீர்கள். நீதிமன்றம் மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா. மாணவியின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்டாதீர்கள். ஒவ்வொரு முறையும் பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள் என நீதிமன்றம் காட்டமாக கேள்விகளை முன்வைத்துள்ளது.

இறுதி சடங்கு
இதையடுத்து பெற்றோர் தரப்பு, தங்களுக்கு மறுஉடற்கூராய்வில் திருப்தி இல்லை. இரு உடற்கூராய்வு வீடியோக்களையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி கூறுகையில் இரு உடற்கூராய்வு அறிக்கைகளை புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறேன். கண்ணியமான முறையில் இறுதி சடங்குகளை நடத்துங்கள். உங்கள் மகளின் ஆன்மா இளைப்பாறட்டும். மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகிறார்கள். அது உங்களுக்கே தெரியாமல் நடந்துள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications