அந்த மனசுதான் சார் கடவுள்.. மருத்துவர் உருவில் ஒரு தெய்வம்.. 10 ரூபாய் டாக்டர் அசோகன் மறைவு!
சிதம்பரம்: சிதம்பரத்தை சேர்ந்த பிரபல 10 ரூபாய் டாக்டர் அசோகன் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த பிரபல டாக்டரான அசோகன், சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வந்தார். வெறும் 10 ரூபாய்க்கு மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
சிதம்பரம் நகரத்தில் மட்டுமல்லாமல், சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இவரிடம் மருத்துவம் பார்த்துள்ளனர். கொரோனா காரணமாக பல்வேறு மருத்துவமனைகள் மூடப்பட்ட போதிலும் கூட இவர் தனது மருத்துவமனையை மூடாமல் பொதுமக்களுக்கு சேவை செய்து வந்தார்.

வாடகை கட்டடம்
வாடகை கட்டடத்தில் மருத்துவமனை நடத்தி வந்தாலும் கூட 10 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் மருத்துவர் அசோகனுக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர் அசோகனுக்கு அஞ்சலி
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார். டாக்டர் அசோகன் உயிரிழந்த செய்தியை கேட்ட சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் ஒன்றாக திரண்டு, டாக்டர் அசோகன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

செல்லபிராணிகள்
மருத்துவமனைக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு யாராவது வந்தால் அவர்கள் பணம் இல்லை என கூறினாலும் விட்டுவிடுவார். கட்டாயப்படுத்த மாட்டார். மிகவும் எளிய குணம் கொண்ட இவர் மருத்துவமனையின் ஒரு பகுதியில் செல்லபிராணிகளான நாய்களை வளர்த்து வந்தார். சில நேரங்களில் மன அமைதிக்கு அதனுடன் நேரத்தை செலவிடுவார்.

பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் நாங்கள் பல ஆண்டுகளாக அசோகன் சாரிடம்தான் வைத்தியம் பார்த்து வந்தோம். வெறும் ரூ 10 க்கு மருத்துவம் பார்த்தார். அந்த 10 ரூபாயை கூட யாராலயாவது கொடுக்க முடியாவிட்டால், பரவாயில்லை என கூறி அன்புடன் சிகிச்சை கொடுத்து வழியனுப்பி வைப்பார். இனி நாங்கள் நூற்றுக்கணக்கில் கொடுத்து வைத்தியம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications