கலைஞர் கைவினைத் திட்டத்தில் பயன்பெற என்ன செய்ய வேண்டும்.. கடலூர் கலெக்டர் முக்கிய தகவல்
கடலூர்: கலைஞர் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் தொழிற் கடன் பெற 35 வயது நிரம்பிய, எந்த வகுப்பினரை சேர்ந்தவராகவும் இருக்கலாம். கல்வித் தகுதி இல்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறினார். ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவியுடன் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மானியத் தொகை மற்றும் 5 சதவீதம் வரை வட்டி மானியமாக வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.
தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டமான கலைஞர் கைவினைத் திட்டம் பற்றிய கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் விஜயகுமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெய்சங்கர், தொழிலாளர் உதவி ஆணையர் ஞானப்பிரகாசம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் மணி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் 35 வயது நிரம்பிய, எந்த வகுப்பினரை சேர்ந்தவரும் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி இல்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், கைவினைஞர்கள் மற்றும் குடிசைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள யார் வேண்டுமானாலும் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவியுடன் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மானியத் தொகை மற்றும் 5 சதவீதம் வரை வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு மேம்பாட்டு பயிற்சியுடன், மானியத்துடன் கூடிய பிணையில்லா கடன் வழங்குதலும், சந்தைப்படுத்தும் திறனை உயர்த்துவதும் தான் நோக்கமாகும். கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.. ஆதார் நகல், வங்கி புத்தகம் மற்றும் எந்திரங்களுக்கான உரிய விலைப்புள்ளி பட்டியல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து மானியத்துடன் தொழிற் கடன் பெற்று தொழில் தொடங்கி பயன்பெற்று மாவட்டத்தை முன்னோடி தொழில் மாவட்டமாக உருவாக்க செய்ய வேண்டும்" என்று கூறினார்.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் பயனாளிகள் குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். படகு தயாரித்தல், மர வேலைகள், உலோக வேலை, மண் பாண்டம், கட்டட வேலை, கயிறு, பாய் பின்னுதல், மலர், பொம்மை வேலைகள், அழகுக்கலை, நகை தயாரிப்பு, துணி வெளுத்தல், துணி தேய்த்தல், இசைக்கருவி தயாரித்தல், பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடு, ஓவியம் வரைதல் உள்பட 25 வகையான தொழில்களை செய்வோர் விண்ணப்பிக்கலாம்.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தலைமையிலான குழு சரிபார்த்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.. இதுதான் தற்போது உள்ள நடைமுறையாகும்.












Click it and Unblock the Notifications