என்எல்சி நிறுவனத்துக்காக மக்களை மிரட்டுவதா?.. "பின்வாங்க மாட்டோம்".. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
கடலூர்: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்காக மக்களின் நிலங்களை பறிக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களின் நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஆதரவாக போலீஸாரை அனுப்பி மிரட்டும் நடவடிக்கைகளை கடலூர் மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் மக்களோடு மக்களாக நின்று பாமக போராட்டம் நடத்தும் எனக் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், தேவைப்பட்டால் போராட்டத்துக்கு தலைமையேற்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

"மக்களை மிரட்டும் போலீஸார்"
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடலூர் மக்களின் உணர்வை அரசும், ஆட்சியரும் மதிக்க வேண்டும். நெய்வேலியை நந்திகிராமம், சிங்கூராக மாற்றி விடக் கூடாது. என்எல்சி சுரங்கத்திற்கு நிலம் தர முடியாது என்று நெய்வேலி பகுதி மக்கள் திட்டவட்டமாக கூறி விட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் அனுப்பி, மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது ஆகும்.

"வெறும் மண் அல்ல, உணர்வு"
என்எல்சிக்காக அரசு கையகப்படுத்த துடிக்கும் நிலங்கள், வெறும் மண் அல்ல. அவை மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை என்பதை அரசு புரிந்துகெல்ள வேண்டும். நிலங்களை வழங்க முடியாது என்ற மக்களின் உணர்வை அரசும், ஆட்சியரும் உணர வேண்டும். மிரட்டி பறிக்கலாம் என்று நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் அது பலிக்காது.

சிங்கூர், நந்திகிராம் போல..
சிங்கூரில் மிரட்டியும், நந்திகிராமில் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் பயனற்று போான வரலாறை அரசு நினைவுகூர வேண்டும். முதலில் அடக்குமுறைகளை கையாண்ட அரசாங்கங்கள், இறுதியில் அங்கு மக்கள் சக்திக்கு முன்பு பணிந்ததை மறந்துவிடக் கூடாது. அந்தப் பகுதிகளில் பறிக்கப்பட்ட நிலங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கே மீண்டும் கிடைத்தன என்பது வரலாறு.

"தலைமையேற்க தயார்"
கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களையும், உரிமைகளையும் காக்க பாமக மட்டுமே போராடுகிறது. இறுதி வெற்றி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. தேவைப்பட்டால், எத்தனை மாதம் வேண்டுமானாலும் களத்தில் முகாமிட்டு, போராட்டத்தை தலைமையேற்று நடத்த நான் தயாராக இருக்கிறேன். கடலூர் மாவட்ட சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்எல்சி நிறுவனத்திற்கு தமிழக அரசு துணை போகக்கூடாது. மக்களின் பக்கம் நின்று, கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேறும்படி என்எல்சி நிர்வாகத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications