கடலூர் அரசு பள்ளியில்.. 15 சத்து மாத்திரையையும்.. ஒன்றாக விழுங்கிய மாணவன்.. அடுத்து என்னாச்சு பாருங்க
கடலூர்: சத்து மாத்திரைகளை சாப்பிட்ட மாணவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.. தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.. இந்த சம்பவம் கடலூரில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
பிறந்த குழந்தைகளுக்கும், இளம் பெண்களுக்கும் ரத்தச்சோகை ஏற்படாமல் இருக்க இரும்புச்சத்து மாத்திரைகள் அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன...

அதன் ஒரு பகுதியாகவே பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை வழங்கப்படுகிறது. ஏற்கெனவே நம்முடைய நாட்டில் 50 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் கூறுகின்றன.
இரும்புச்சத்து: இளம் வயதிலேயே இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிடவில்லையென்றால், அந்த பாதிப்பை சரிசெய்வது கடினம் என்கிறார்கள்.. ஃபெரஸ் சல்பேட் எனப்படும் இரும்புச்சத்து மாத்திரைகள் வாரம் ஒருமுறை பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகின்றன. இதைத்தவிர குடற்புழு நீக்க மாத்திரையும் பள்ளி மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள 58,339 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 78 லட்சம் மாணவர்களுக்கு இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் சத்து மாத்திரைகள் வாரத்துக்கு ஒன்று வீதம் 52 வாரங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வருடம் கள்ளக்குறிச்சி, நீலகிரி மாவட்டங்களில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டன.
படிக்கும் மாணவர்கள்: அதாவது, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி புதுக்காலனி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசால் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டிருந்தன.. அந்த மாத்திரை சாப்பிட்ட சிலருக்கு வயிற்றுவலியும், சிலருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது.. பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
அதேபோல, ஊட்டி அருகிலுள்ள காந்தள் பகுதியில் ஊட்டி நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி மாணவி ஒருவர், அதிக மாத்திரைகளை சாப்பிட்டு பலியாகிவிட்டார்.. அந்த பள்ளியில் வழங்கப்பட்டிருந்த சத்து மாத்திரைகளை, யார் அதிகமாக விழுங்குவது என்று மாணவிகளுக்குள் போட்டி வைத்திருக்கிறார்கள்.
தீவிர சிகிச்சை: 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளுக்கு இப்படியொரு போட்டி ஏற்பட்டு, 4 பேருமே அதிக சத்து மாத்திரைகளை விழுங்கியிருக்கிறார்கள்.. 4 பேருமே மயக்கமடைந்திருக்கின்றனர்... இவர்களுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டும், ஒருமாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.. இவர்களுக்கெல்லாம் சத்து மாத்திரை ஒரே நேரத்தில், எப்படி இவ்வளவு கிடைத்தது? என்ற விசாரணையெல்லாம் அப்போது நடைபெற்றது.
இந்நிலையில், கடலூரிலும் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.. குறிஞ்சிப்பாடி பெரிய கண்ணாடி கிராமத்தை சேர்ந்த 12 வயது மாணவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்... இந்த பள்ளியிலும், வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சத்து மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.. அப்படித்தான், நேற்று வியாழக்கிழமை காலையிலும் மாத்திரை தரப்பட்டுள்ளது.
சத்து மாத்திரைகள்: சத்து மாத்திரைகள் (போலிக் ஆசிட் இரும்பு சத்து மாத்திரை)அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.. ஆனால், சில மாணவர்கள் இந்த மாத்திரைகளை சாப்பிடுவதில்லையாம்.. அதனால், மாத்திரை சாப்பிடாத மாணவர்கள், தண்ணீர் குடிக்கும் இடத்தில் மாத்திரைகளை வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகின்றது.. அப்போது, தண்ணீர் குடிக்கும் இடத்திற்கு வந்த 8-ம் வகுப்பு மாணவன், அங்கிருந்த ஏராளமான மாத்திரைகளை பார்த்திருக்கிறார்.
ஒரே நேரத்தில் நிறைய மாத்திரைகள் சாப்பிட்டால், சக்திமான் போல உடம்பில் சத்து அதிகரிக்கும் என்று நினைத்து, அங்கிருந்த 15 மாத்திரைகளையும் மொத்தமாக ஒரே நேரத்தில் சாப்பிட்டுள்ளார்.. இதில் மாணவனுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது..
பரபரப்பு: பிறகு இதுகுறித்து ஆசிரியரிடம் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.. இதைக்கேட்டு பதறிப்போன ஆசிரியர்கள், மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.. மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications