தாய்லாந்து போக ஆசைப்பட்ட கடலூர் பரமசிவம் தாத்தா.. தேடி வந்த டூர் பேக்கேஜ்.. இப்படியெல்லாம் நடக்குமா?
கடலூர்: டூர் பேக்கேஜ் என்ற பெயரில் மோசடிகள் பெருகி கொண்டிருக்கின்றன.. இதுபோன்ற முறைகேடுகளையும் மோசடிகளையும் தடுக்க தமிழக சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், மோசடிகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்தவகையில் கடலூரில் ஒரு நூதன மோசடி நடந்துள்ளது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருவதுடன், மோசடிப்பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வருடா வருடம் கோடை விடுமுறைகளில் சுற்றுலாவுக்கு குடும்பத்துடன் செல்வது பெரும்பாலானோரின் விருப்பமாகும்.. அதேபோல ஆன்மீக சுற்றுலா என்றும் குழுவாக கிளம்பி செல்வார்கள்.. இதுபோன்றோருக்காக, டூர் பேக்கேஜ் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது.. இதற்காக ஏராளமான ஏஜென்சிகளும் உள்ளன.

அந்தவகையில் தாய்லாந்து நாட்டிற்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டுவதால், இதிலும் முறைகேடுகள் நடக்கின்றன.. தாய்லாந்து சென்றால், எப்படியெல்லாம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றப்படுவார்கள் என்பது குறித்து சமீபத்தில் ஒருவர், ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
அதில், பாங்காங்கில் டுக் டுக் விலை, 100 தாய்பாட் என்பார்கள். ஆனால் இறங்கும்போது, ஒரு நபருக்கு 100 தாய்பாட் என்று பிளேட்டையே திருப்பி விடுவார்கள். பட்டாயா, புக்கட், பாங்காங்கில் காஸ்ட்லியான ஜெம் கேலரியில் வாங்கும்போது, உண்மையானதா? என்று கவனித்து வாங்க வேண்டும்.
கவனமாக இருங்கள்
இந்திரா மார்க்கெட், பிரத்துனம் மார்க்கெட்டில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மணி எக்ஸேஜ் செய்து தருகிறோம் என்று பங்களாதேஷ், பாகிஸ்தானியர்கள் பலர் வருவதால் கவனமாக செயல் படவேண்டும். இரவில் பட்டயாவில் வாக்கிங் செல்லும்போது, திருட்டு சம்பவங்கள் நடக்கும் என்பதால், நகைகளுடன் செல்வதை தவிர்க்கலாம்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்ல ஆசைப்பட்டு ஒருவர் ஏமாந்து போயிருக்கிறார். கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் பரமசிவம்.. 70 வயதாகிறது.. இவர் தன்னுடைய நண்பர்களுடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.

எனவே, ஃபேஸ்புக்கில் வந்த ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து, அதில் தரப்பட்டிருந்த செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் திருப்பூர் மாவட்டம் மடத்துபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரசுதன் (36) என்பவர் பேசியிருக்கிறார்..
திருப்பூர் - தாய்லாந்து
அவரிடம் பரமசிவம், தனக்கும் தன்னுடைய நண்பர்கள் 18 பேருக்கும் தாய்லாந்து சுற்றுலா செல்வதற்கு பேக்கேஜ் தயார் செய்து தரும்படி கேட்டுள்ளார். உடனே ஹரிஹரசுதனும் அனைவரையுமே தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறியிருக்கிறார்.
பிறகு பரமசிவத்திடம் தன்னுடைய வங்கி கணக்கு மூலம் ரூ.5 லட்சத்து 82 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். ஆனால், யாரையுமே ஹரிஹரசுதன் தாய்லாந்து அழைத்துச் செல்லவில்லை... இதனால் ஏமாற்றமடைந்த பரமசிவம், டூர் செல்வதற்காக தந்த பணத்தை கேட்டுள்ளார்.. ஆனால், அந்த பணத்தையும், ஹரிஹரசுதன் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.. எனவே, இதுகுறித்து பரமசிவம் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
சைபர் கிரைம் போலீஸ்
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரிஹரசுதனின் செல்போன் நம்பர், பேங்க் அக்கவுண்ட் போன்றவற்றை வைத்து, தேட துவங்கினார்கள்.. இறுதியில், பொள்ளாச்சியில் அவர் தலைமறைவாக இருப்பதை அறிந்து, விரைந்து சென்று கைது செய்தனர்.
ஹரிஹரசுதன் மீது ஏற்கனவே, மதுரை, சென்னையில் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன்களில் இதேபோன்ற புகார்கள் இருப்பது தெரியவந்துள்ளது.. சுற்றுலா பேக்கேஜ் வசதி செய்து தருவதாக சொல்லி, லட்சக்கணக்கில் மோசடி செய்திருக்கிறாராம். இப்போது கடலூர் ஜெயிலில் உள்ளார் ஹரிஹரசுதன்.












Click it and Unblock the Notifications