எனக்குன்னே வருவீங்களா.. 'ஊதுப்பா ஊதுப்பா'.. பாடாய் படுத்திய ஆட்டோ ஓட்டுநர்.. கடலூர் போலீசார் கெஞ்சல்
கடலூர்: கடலூரில் மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை மது அருந்தும் கருவியில் ஊதச் சொல்லி 10 நிமிடத்திற்கு மேலாக மல்லுக்கட்டினர்.
வார இறுதி நாளானதால் பலர் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். மதுபோதையில் வாகனம் ஓட்டுவது வார இறுதிகளில் அதிகமாக உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் மது போதையில் விபத்து ஏற்படுவதை தடுக்க தீவிர சோதனை நடத்துகிறார்கள்.

அப்படித்தான் கடலூரில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது கடலூர் நகரப்பகுதியில் தாறுமாறாக ஓடிய ஆட்டோவை தடுத்து நிறுத்தினர். ஆனால் நிறுத்தாமல் அவர் சென்றுள்ளார். உடனே அவரை போக்குவரத்து போலீசார் துரத்தி சென்றனர்.
அந்த ஆட்டோவை கடலூர் பாரதி சாலை பெட்ரோல் பங்கில் தடுத்து நிறுத்தினர். அத்துடன் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த ஓட்டுநர் மது அருந்தியிருக்கிறாரா என்பதை உறுதி செய்யும் கருவியில் அவரை போலீசார் ஊதச் சொன்னார்கள்.
ஆனால் ஆட்டோ ஓட்டுநர் கருவியில் ஊதாமல் தொடர்ந்து அடம் பிடித்தார். ஊது தம்பி என கெஞ்சி போலீசார், சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக அவரோடு மல்லுக்கட்டினர். ஊது, ஊது, ஊதுய்யா, ஒழுங்கா ஊதுய்யா என்று தொடர்ந்து கெஞ்சிய நிலையில் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகே ஆட்டோ ஓட்டுநர் ஊதினார். அந்த சோதனையில் அவர் மது அருந்தி இருந்தது உறுதியானது.
இதையடுத்த ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் விதிக்கப்படுகிறது. மது அருந்தியவர்களிடம் வாகனத்தை பொதுவாக பறிமுதல் செய்யும் போலீசார் அபராதம் கட்டிய உடன் விடுவித்துவிடுவார்கள்.
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்றால், அதிவேகமாக வாகனத்தை இயக்குவது மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனையும் கிடைக்கும்.
சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1000 அபாதம் விதிக்கப்படும். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சிக்னலை முதல் முறை மீறி சென்றால் 500 ரூபாயும், அடுத்த முறை அல்லது அதற்கு மேல் என்றால் 1500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. கண்ட இடத்தில் பார்க்கிங் செய்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications