கடலூரில் வேன் விபத்து! தண்டவாளத்தில் சிதறிக் கிடக்கும் புத்தகங்கள்! கேட்டை மூட கீப்பருக்கு போன் வந்ததா?
கடலூர்: கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் புத்தகப் பைகள் சிதறிக் கிடந்ததை பார்த்தோர் மனம் கலங்கியது. பள்ளி வேன் விபத்துக்குள்ளானதை அறிந்த பெற்றோர் சம்பவ இடத்திற்கு பதறி அடித்துக் கொண்டு வந்தனர். மேலும் கேட்டை மூட தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவிக்கும் வகையில் non interlocking system இங்கு பின்பற்றப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை 7.45 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியில் ரயில்வே கேட் இருந்தது. அதன் வழியே பள்ளி வேன் கடக்க முயன்றது.

இந்த நிலையில் பள்ளி வேன் சென்ற போது அந்த பகுதி வழியாக மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த ரயில், பள்ளி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி வேன் 50 மீட்டருக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
ஆங்காங்கே குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸாருக்கும் ஆம்புலன்ஸுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தம்பி ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். நிவாஸ் (12), சாருமதி (16) ஆகியோர் இறந்துவிட்டனர். அது போல் காயமடைந்த செழியன், விஷ்வாஸ், வேன் ஓட்டுநர் சங்கர் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த மூவரில் செழியனின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் அவர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். இந்த விபத்துக் குறித்து நேரில் பார்த்தவர்கள் சொன்னது என்னவெனில்: காலையில் ரயில் வரும் நேரம் தெரிந்தும் ரயில்வே கேட் கீப்பர் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் பங்கஜ் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது கேட் மூடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தண்டவாளத்தை , பள்ளி வேன் கடக்க முயன்ற போதுதான் ரயில் மோதிவிட்டது. எனவே கேட் கீப்பர் கேட்டை மூடியிருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது என்றனர். ஆனால் இதை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.
கேட் கீப்பர் கேட்டை மூடச் சென்ற போது பள்ளி வேன் ஓட்டுநர்தான் திறக்க கோரினார் என்கிறார்கள். எனினும் கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த ரயில்வே கேட்டானது Non interlocking வசதி கொண்டது.
அதாவது தொலைபேசி மூலம் கேட்டை மூடுவதற்கு தகவல் கிடைத்தவுடன் கேட்டை மூடுவதற்கு கேட் கீப்பர் நடவடிக்கை எடுப்பார். எனவே இந்த விபத்து நடந்த பகுதியில் கேட்டை மூட தொலைபேசி மூலம் உரிய தகவல் அளிக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.
தண்டவாளத்தில் ஆங்காங்கே மாணவர்களின் புத்தகப் பைகள், உணவு பைகள் சிதறி கிடக்கின்றன. இதை பார்ப்பதற்கே மனம் பதைபதைப்பதாக சொல்கிறார்கள். மேலும் தமிழகத்தைச் சேர்ந்தவரை கேட் கீப்பராக வைத்திருந்தால் அவர் நம் ஊர் சூழல் தெரிந்து தனது பணியை ஒழுங்காக செய்திருப்பார் என குற்றம்சாட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications