கடலூர் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது! குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றிய போலீஸார்!
கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பொது மக்கள் தாக்கியதால் நடக்கக் கூட முடியாத நிலையில் போலீஸார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். அவருக்கு கையிலும் காலிலும் காயமேற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ஒரு ரயில்வே லெவல் கிராசிங்கில், இன்று காலை தனியார்பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. ரயில் மோதியதில் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு உருக்குலைந்தது.

இந்த விபத்தில், முதற்கட்ட தகவல்களின்படி, இரண்டு பள்ளி மாணவர்கள் 12 வயது நிவாஸ் மற்றும் 16 வயது சாருமதி ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். மேலும் காயமடைந்த சாருமதியின் தம்பி செழியன், மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்துவிட்டார்.
எத்தனை பேர் காயம்
மேலும் விஷ்வாஸ், பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பள்ளி வேனில் குறைந்த அளவே மாணவர்கள் இருந்ததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்திற்கான காரணம் (முதற்கட்ட தகவல்கள்)
கேட் கீப்பரின் அலட்சியம்: இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுவது, ரயில்வே கேட்டைக் கண்காணிக்க வேண்டிய கேட்கீப்பர் தூங்கியதுதான். ரயில் வரும் நேரத்தில் அவர் கேட்டை மூடாததால், பள்ளி வேன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. பொதுமக்கள் ஆத்திரமடைந்து கேட் கீப்பரைத் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரயில்வே விளக்கம்: தெற்கு ரயில்வேயின் கூற்றுப்படி, ரயில்வே கேட்கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், ரயில் வருவதை அறிந்தும் வேன் டிரைவர் கூறியதைக் கேட்டு ரயில்வே கேட்டைத் திறந்ததே விபத்துக்குக் காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால், விபத்திற்கான காரணம் குறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.
நடவடிக்கைகள்
விபத்து குறித்து காவல்துறையும் ரயில்வே துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த நிலையில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை ஏற்கெனவே பொதுமக்கள் தாக்கிய நிலையில் அவரை மீண்டும் தாக்காமல் இருக்க ரயில்வே போலீஸார் அவரை கேட் கீப்பர் அறையிலேயே வைத்திருந்தனர்.
கேட் கீப்பர் கைது
பொது மக்கள் தாக்கியதில் கை, கால்களில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. இந்த நிலையில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரால் நடக்க முடியாத நிலையில் போலீஸார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.
லெவல் கிராசிங்
இந்த விபத்து கடலூரில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே பாதுகாப்பு குறித்தும், லெவல் கிராசிங்குகளில் கவனக்குறைவு குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications