கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், ஓட்டுநர் உள்பட 13 பேருக்கு பறந்த சம்மன்.. நேரில் ஆஜராக உத்தரவு
கடலூர்: கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேட் கீப்பர் ரயில்வே கேட்டை மூட மறந்து தூங்கியதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாக வேன் ஓட்டுநர், கேட் கீப்பர் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் இந்த விபந்து நேரிட்டது.

இந்த விபத்தில், சாருமதி (16), விமலேஷ் (10), செழியன் (15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். கேட் கீப்பர் மது அருந்தியிருந்ததாகவும், கேட்டை மூட மறந்துவிட்டு தூங்கியதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும், கேட் கீப்பர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு மொழி புரியாததால் ஏற்பட்ட கவனக்குறைவாலேயே இந்த விபத்து நேரிட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்தவரை புதிய கேட் கீப்பராக நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, செம்மங்குப்பம் பகுதிக்கு இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் புதிய கேட் கீப்பராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சமும், பலத்த காயமடைந்த மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சமும். லேசாக காயமடைந்த மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேருக்கு கவனக் குறைவாக நடந்து கொண்டதாகக் கூறி சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நேரில் ஆஜராககவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி ஓட்டுநர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித் குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன், வாசுதேவ பிரசாத், சிவகுமரன் உள்பட 13 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications