கடலூர் தம்பிகளுக்கு உடம்பெல்லாம் மூளை.. 32 ரூபாய் வாங்கி 200 ரூபாய்க்கு விற்று லாபம்.. ட்விஸ்ட்
கடலூர்: இன்றைகு பலர் சம்பாதிப்பதற்காக குறுக்கு வழிகளை நாடுகிறார்கள். அரசு வேலை தேடுவோரை குறிவைத்து ஏமாற்றி பணம் பறிப்பது, பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கும் என்று ஆன்லைனில் முதலீடு செய்ய வைத்து பறிப்பது, அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனங்களைநடத்தி ஏமாற்றுவது என பல வழிகளை கையாளுகிறார்கள். இன்னும் சிலர், மதுபாட்டில்களை கடத்தி விற்கிறார்கள். சிலர் போதை மாத்திரைகளை விற்கிறார்கள். அப்படி விற்ற கடலூர் இளைஞர்கள் கைதாகி உள்ளனர்.
போதையின் பாதை தவறானது என்றாலும், அதனை நாடுவோர் இன்று பலர் இருக்கிறார்கள்.. அவர்களை வைத்து சட்டவிரோதமாக சம்பாதிக்க பலர் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட இரண்டு பேர் தான் கைதாகி உள்ளனர். எப்படி சிக்கினார்கள் என்பதை பார்ப்போம்.

கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் இருந்து 2 பேர் போதை மாத்திரைகளை வாங்கிச்செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கடலூர் போலீசார், அந்த கூரியர் பார்சலை வாங்கி சென்ற 2 பேரை தனிப்படை போலீசார் கடலூர் முதுநகர் பஸ் பேருந்து நிறுத்தம் அருகில் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை புதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கடலூர் முதுநகரை சேர்ந்த தாஸ் மகன் அரவிந்த் (வயது 19), ராமு மகன் ராகுல் (22) என்பதும் தெரியவந்தது. அவர்கள் இரண்டு பேரும் புனேவில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை வரவழைத்து, அதை போதைக்கு பயன்படுத்தியதும், மேலும் அந்த மாத்திரைகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 500 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், கடலூரில் வலி நிவாரணி மாத்திரைகளை கூரியர் மூலம் வாங்குகிறார்கள். அதனை போதைக்கு பயன்படுத்தியதுடன், பலருக்கும் விற்பனை செய்த அரவிந்த், ராகுல் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
அவர்கள் ஒரு மாத்திரையை ரூ.32-க்கு வாங்கி, ரூ.200-க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. தற்போது 500 மாத்திரைகளை ரூ.16 ஆயிரம் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். இவர்கள் யாரிடம் இருந்து மாத்திரையை வாங்கி வந்தார்கள்? என்றும், இதுவரை யார், யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளார்கள்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார். புனேவில் மருந்து சப்ளை செய்பவர்களும் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications