தலை துண்டிக்கப்படும்.. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நிர்வாகி கைது
கடலூர்: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்தின் தலை துண்டிக்கப்படும் என முகநூலில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 ஆம் ஆண்டு அதாவது 11 ஆண்டுகள் கழித்து நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது.
கவுன்சிலர்கள், மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள், நகராட்சி துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். கவுன்சிலர்கள் மாயம், வன்முறை, அடிதடி உள்ளிட்டவைகளுக்கு நடுவே இந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றனர்.

கடலூர் மாநகராட்சி
அந்த வகையில் கடலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 45 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 34 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் பாஜக, பாமக தலா ஒரு இடத்திலும் சுயேச்சைகள் 3 பேரும் வென்றுள்ளார்கள். கடலூர் மாநகராட்சியில் 27 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றது.

முதல் பெண் மேயர்
திமுக சார்பில் முதல் பெண் மேயராக திமுக நகரச் செயலாளரின் மனைவி சுந்தரி அறிவிக்கப்பட்டார். ஆனால் மேயர் தேர்தல் அன்று சுந்தரிக்கு எதிராக திமுக கடலூர் மாவட்ட பொருளாளர் மனைவி கீதா குணசேகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். எனினும் மேயராக சுந்தரியே வென்றார்.

கவுன்சிலர்கள் மாயம்
இந்தத் தேர்தலுக்கு முன்னதாக கவுன்சிலர்கள் திடீரென மாயமாகிவிட்டனர். 7 பேர் மேயர் தேர்தலுக்கு வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சட்டசபை உறுப்பினர் ஐயப்பன்தான் தேர்தல் குழப்பத்திற்கு காரணம் என்றும் தலைமையின் அறிவிப்பை மீறி தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் திமுக தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கியது.

கடலூர் மாநகராட்சி மேயர்
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரியின் கணவரும் கடலூர் நகர திமுக செயலாளருமான கே எஸ் ராஜா நேற்று கடலூர் புதுநகர் காவல் துறையினிடம் புகார் செய்தார். அதில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக வேளாண்துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர் செல்வம் குறித்து கடலூர் எஸ்.என்.சாவடி டிஎஸ்ஆர் நகரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் (51) என்பவர் முகநூல் பதிவில் அவதூறு பரப்பியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜா புகார் அளித்தார்.

அமைச்சர் எம்ஆர்கேவுக்கு கொலை மிரட்டல்
புகாரின் பேரில் முகநூல் பக்கத்தை ஆய்வு செய்ததில் மாவட்ட கழகத்தை வீணாக்கிய சாதி வெறி பிடித்த எம்ஆர்கே பி அவர்களின் தலை துண்டிக்கப்படும். எம்ஆர்கே எனும் சாதி வெறி பிடித்த ஆதிக்க வெறியனின் அழிவு ஆரம்பம் என அவதூறாக பதிவிடப்பட்டிருந்தது. இதையடுத்து திமுக பிரமுகர் முரளி கிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications