ரூ.700 கோடி செலவு செய்து திமுக இதை செய்யணுமா.. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அன்புமணி
கடலூர்: பிரசாந்த் கிஷோரை நம்பியே திமுக உள்ளது. ரூ. 700 கோடி செலவு செய்து எப்படியேனும் தன்னை முதல்வராக்கி விடுங்கள் என ஸ்டாலின், பிரசாந்த் கிஷோரிடம் சென்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.என பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று கம்மாபுரத்தில் பேசுகையில், 40 வருட தியாக போராட்டத்தாலும், 21 உயிர்களின் தியாகத்தாலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனிஒதுக்கீட்டை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மறக்க முடியாது.
அனைத்து சமுதாயத்தினருக்கும் தனித்தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. தமிழ்நாட்டில் 70 ஆண்டிற்குப் பிறகு விவசாயி ஒருவர் முதல்வராக வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம்.

விவசாயி எடப்பாடி
விவசாய குடும்பத்திலிருந்து வந்த எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக வேண்டும் என விவசாயிகள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்து விட்டனர். ஸ்டாலின் அரசியல் வியாபாரி. ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி ஒன்றும் தெரியாது. அவருக்கு எப்படியாவது முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஆத்திரமாக மாறியுள்ளது. கருணாநிதியின் மகன் என்பதை தவிர வேறு ஒரு தகுதியும் இல்லை. திமுக ஒரு கம்பெனி. கட்சி அல்ல. அவர்கள் குடும்பத்தை தவிர வேறு யாரும் அங்கு பொறுப்புக்கு வர முடியாது.

ஆ ராசா பேச்சு
திமுகவால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் கேவலப்படுத்தப்படுகிறார்கள். ஆ ராசா முதல்வரின் தாயார் பற்றி தவறாக பேசினார் .ஸ்டாலின் அதனை ரசிக்கிறார். தமிழ்நாட்டு ஒட்டுமொத்த பெண்களும் திமுகவை புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

நாமம் தான் போடுவார்கள்
முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ள, பெண்களுக்கு 1500 ரூபாய், 6 சிலிண்டர், சுய உதவிக் கடன் தள்ளுபடி , 100 நாள் வேலை திட்டம் 150 நாள் ஆக உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இலவசம் அல்ல. அத்தியாவசியம். ஆனால் திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாது. நாமம் தான் போடுவார்கள்.
அந்த கட்சி பிரசாந்த் கிஷோரை நம்பியே உள்ளது.

முதல்வர் கனவு
ரூ. 700 கோடி செலவு செய்து எப்படியேனும் தன்னை முதல்வராக்கி விடுங்கள் என பிரசாந்த் கிஷோரிடம் சென்று ஸ்டாலின் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். நமது கூட்டணி சமூக நீதி கூட்டணி. சமூக நீதி என்றால் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது .ஸ்டாலினின் முதல்வர் கனவு கனவாகவே போகட்டும். அதிமுகவுக்கு ஓட்டுபோடுகள்" இவ்வாறு அன்புமணி பேசினார்.












Click it and Unblock the Notifications