''எவனாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது! எங்கே போனாலும் தனியாகத் தான் போவேன்''! -திமுக MLA ஐயப்பன்
கடலூர்: எவனாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் எங்கே போனாலும் தனியாகத் தான் போவேன் எனவும் பேசியிருக்கிறார் கடலூர் திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன். நேற்று முன் தினம் இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற ஐயப்பன் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றார்.
அதில் நல்வாய்ப்பாக திமுக எம்.எல்.ஏ. ஐயப்பனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக களமிறங்கி விசாரணையை முடுக்கிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் வீட்டிற்கு அவரது ஆதரவாளர்கள் வெகுவாக திரண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மத்தியில் பேசிய திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன், தன் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் ஒரு கருவி மட்டுமே என்றும் அந்தக் கருவியை இயக்கியது யார் என்பதை தான் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், தாம் எங்கே சென்றாலும் காருக்கும் முன்னேயும், பின்னேயும் அடியாட்களை அழைத்துச் செல்லமாட்டேன் என்றும் தாம் யாருக்கும் கெடுதல் செய்யாததால் எங்கே போனாலும் தனியாகத் தான் போவேன் எனவும் தெரிவித்தார். எவனாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என சவால் விடுத்த அவர் தயவு செய்து நீங்களெல்லாம் கலைந்து செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தானும் சரி தனது குடும்பத்தினரும் சரி யாருக்கும் துரோகம் செய்ததே கிடையாது என்றும் உழைப்பால் தான் முன்னேறியிருப்பதாகவும் உருக்கமுடன் தெரிவித்தார். தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர் தான் இப்படியொரு கீழ்தரமான மலிவான காரியத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் சட்டம் ஒழுங்கு தொடர்பான காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விவகாரம் பற்றி முதல்வர் கேட்பார் என்பதால் கடலூர் மாவட்ட காவல்துறையினர் இந்த வழக்கில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications