"திருமாவளவன் கட்சி எல்லாம் ஒரு கட்சியா? அது நாட்டுக்கு தேவையா?" போட்டு தாக்கிய ராமதாஸ்
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்தார்.
Recommended Video

சிதம்பரம்: நேரடியான எதிரியான ஸ்டாலினை விமர்சனம் செய்கிறாரோ இல்லையோ... போகிற இடங்களில் எல்லாம் மறக்காமல் திருமாவளவனை போட்டு தாக்கி பேசி வருகிறார் டாக்டர் ராமதாஸ்! "திருமாவளவன் நடத்துறது எல்லாம் ஒரு கட்சியா? அந்த கட்சி நாட்டுக்கு தேவையே இல்லை" என்று ஒரேடியாக சொல்லிவிட்டார்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ராமதாஸ் பேசியபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தாக்கி பேசினார். ஒருவேளை சிதம்பரம் தொகுதி என்பதால் இது ஓவர் டோஸ் ஆகிவிட்டதா தெரியவில்லை. டாக்டர் பேசியதாவது:
"சிதம்பரத்தில் அதிமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை பற்றி உங்க எல்லாருக்கும் தெரியும். அவருக்கு ஒரு அடையாளத்தை தந்தது யார் தெரியுமா? நான்தான்!

ரத்தம் சொட்டும்
அன்றைய காலங்களில் மதுரை வட்டார சுவர்களில் எல்லாம் வீச்சரிவாளுடன் ரத்தம் சொட்டும் காட்சிதான் நிறைய பார்க்க முடியும். இப்படி ஒரு நிலைமையை மாற்ற வேண்டும் என்று நினைச்சுதான் திருமாவளவனுடன் கூட்டு சேர்த்தேன். அவருக்காகவே நிறைய பொதுக்கூட்டம் நடத்தி, அதில் அவரை பேச வைத்தேன்.

முகம் சுளிக்கிறார்கள்
மதுரையிலிருந்து அவரை கூட்டிட்டு வந்து அரசியல் அறிமுகம் செய்து வைத்தேன். கட்சித் தொண்டர்களுக்கு அரசியல் பயிலரங்கம் ஒன்று நடத்துங்கள், அவர்களை நல்வழிப்படுத்துங்கள் என்று சொன்னேன். ஆனால் அதை அவர் கேட்கவே இல்லை. அதுக்கு பதிலாக அவருடைய இளைஞர்களுக்கு வேறு மாதிரி பயிற்சி தந்து வைத்திருக்கிறார் என்று அப்பறம்தான் எனக்கு தெரியவந்தது. விடுதலை சிறுத்தை கட்சி கொடியை பார்த்தாலே மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு மாறிவிட்டது.

அது ஒரு கட்சியா?
அப்பறம் 2 பேரும் இணைந்து பல்வேறு இயக்கங்களை நடத்தினோம். அதனையொட்டி தமிழ் குடிதாங்கி என்ற பட்டமும், அம்பேத்கர் விருது வழங்கினார். ஆனால் அவரது போக்கு, மக்களுக்கு எதிராக இருந்தது. சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில்தான் இருந்தது. முதலில் அவர் நடத்துவது கட்சியே இல்லை. அந்தக் கட்சி நாட்டுக்கு தேவையே கிடையாது.

என் தப்புதான்
தமிழ் சமூக சீர்திருத்தத்திற்காக அரசியலில் அவரை அறிமுகம் செய்து வைத்தது என் தப்புதான். அவரது கட்சி வன்முறை, கட்ட பஞ்சாயத்து கட்சியாக உள்ளது. என்னை கேட்டால் இப்படி ஒரு கட்சியே எதுக்கு? வேண்டாம் என்றுதான் சொல்வேன்" என்றார்.

துணை முதல்வர் பதவி
இவ்வளவும் பேசி முடித்த டாக்டர் ராமதாஸ், கடைசியாக திமுக தலைவரை பற்றி சொன்னார். அப்போது, "இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்னன்னமோ செய்து வருகிறார். கோபத்தில் எதைஎதையோ பேசுகிறார். அவங்க அப்பா கருணாநிதியிடம் சொல்லி, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க செய்தது யார் தெரியுமா? நான்தான். ஆனால், என்னைப் பத்தியும் ஏதோதோ பேசுகிறார். அதைப் பத்தியெல்லாம் எனக்கு கவலை கிடையாது" என்றார்.












Click it and Unblock the Notifications