அரசு பஸ்ஸில் பழுதான ஹெட்லைட்.. டிரைவர் செயலால் பீதியுடன் பயணித்த பயணிகள்! அதிரடி காட்டிய நிர்வாகம்
கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் 40 பயணிகளுடன் இரவில் சென்ற அரசு பேருந்தில் ஹெட் லைட் பழுதானதால் மோட்டார் சைக்கிள் வெளிச்சத்தில் இயக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் முன் செல்ல பின்னாடியே அரசு பேருந்தை ஆபத்துடன் டிரைவர் ஓட்டி சென்றது பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று மருதூர், புவனகிரி வழியாக சிதம்பரத்துக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வடலூரை சேர்ந்த மோகன்தாஸ் என்ற டிரைவர் ஓட்டி சென்றார். இரவு 8.30 மணி அளவில் கரைமேட்டில் இருந்து மருதூர் சாலை வளைவில் திரும்பியபோது பேருந்தின் ஹெட் லைட் திடீரென பழுதானது.

அடுத்த சில வினாடிகளில் பேருந்தில் இருந்த லைட்டுகளும் சரியாகவில்லை. இதையடுத்து, அங்கேயே பேருந்தை நிறுத்திய டிரைவர், ஹெட்லைட்டை சரி செய்ய முயற்சித்து பார்த்தார். ஆனால், சரி செய்ய முடியவில்லை. ஹெட் லைட் பழுது பற்றி பேருந்து டெப்போவிற்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அந்த வழியாக பைக்கில் ஒருவர் வந்தார்.
அவரிடம் டிரைவர் மோகன்தாஸ், பேருந்தில் முகப்பு விளக்கு எரியவில்லை என்றும், நீங்கள் மோட்டார் சைக்கிளில் முன்னால் சென்றால் உங்களை பின்தொடர்ந்து பேருந்தை ஓட்டி வருவேன் என்றார். அதற்கு அந்த இருசக்கர வாகன ஓட்டியும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து மருதூர் சாலையில், பைக் முன்னால் செல்ல, அந்த வெளிச்சத்திலேயே டிரைவர் மோகன் தாஸ் பேருந்தை இயக்கினார்.
பேருந்திற்குள் உள்ளும் இருட்டாக இருந்த நிலையில், வெளியிலும் பைக் வெளிச்சத்தில் பேருந்து இயக்கப்பட்டதால் பேருந்தில் இருந்த 40 பயணிகளும் அச்சத்துடனேயே பயணித்தனர். இதை பேருந்தில் பயணித்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து, அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
விளக்குகள் பழுதானதும் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, பயணிகளை மாற்று பேருந்தில், பாதுகாப்பாக அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்றும், அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்ந்தனர். மேலும் பயணிகளின் உயிரை பணயம் வைத்து இப்படி அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கலாமா? எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுபினர்.
இதனிடையே, இந்த வீடியோவை பார்த்த கடலூர் மண்டல பொது மேலாளர் ராகவன் விசாரித்தார். அப்போது, விளக்கு பழுதானதும் டிரைவர், அரசு பேருந்தை நிறுத்தாததும், போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவிக்காததும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் மோகன்தாசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications