தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த பக்தர்! தாவி பிடித்து காப்பாற்றிய 'முகமது'.. மதமென பிரிந்தது போதும்
கடலூர்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவின்போது தீயில் விழுந்த பக்தரை உடனடியாக தீயணைப்பு படை வீரர் முகமது சல்மான் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சல்மானுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
டெல்டாவின் தொடக்கமாக இருக்கும் மாவட்டம்தான் கடலூர். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை போலவே இதுவும் வெயில் நிறைந்த ஒரு பகுதிதான். சம்மர் சீசனில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிடும். எனவே கோடைக்கால வெப்ப நோய்களும் பரவ தொடங்கிவிடும். இதை தடுக்க மழை வேண்டி அம்மனை வழிபடுவார்கள். அப்படி வழிப்படப்படும் மிகவும் சக்திவாய்ந்த அம்மன்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழத்தெருவில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோயில்.

மற்ற கோயில்களை போலவே இந்த கோயிலிலும் ஆண்டு தோறும் பக்தர்கள் திருவிழா நடத்தி தீ மிதித்து, அம்மனுக்கு பால்குடம் எடுப்பார்கள். இதன் மூலம் அம்மனை குளிர வைத்து மழை பெய்ய வைப்பதுதான் இதன் நோக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் ஜூலை மாதம் 21ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. தெருவடைச்சான் உற்சவம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உற்சவம் நடைபெற்றது.
இதனையடுத்து 30ம் தேதியன்று தேர் திருவிழா நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 31ம் தேதியன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் விரதமிருந்து அக்னியில் இறங்கினர். இந்நிலையில் இந்த தீமிதி சம்பவத்தின்போது பக்தர் ஒருவர் தலைக்குப்புற தீயில் விழுந்துள்ளார். சுற்றி நின்ற மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வேடிக்கை பார்க்க, உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு படை வீரர் முகமது சல்மான் அவரை போராடி மீட்டிருக்கிறார்.

மற்ற வீரர்கள் அந்த பக்தரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கின்றனர். இந்நிலையில் பக்தரை மீட்ட முகமது சல்மானை அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். "வடக்கே சீருடை அணிந்தவர்கள் மத்தியிலும் வெறுப்பின் விஷம் விதைக்கப்படும் சூழலில், தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றிய நிகழ்வு" இது என சிபிஎம் பாராட்டு தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications