திருமணத்தை மீறிய உறவா? கடலூரில் மனைவி, மாமியார் குத்திக் கொலை.. அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது?
கடலூர்: திருமணத்தை மீறிய உறவு குறித்த சந்தேகத்தினால் கடலூரில் தனது மனைவி மற்றும் மாமியாரை பட்டப்பகலில் வாலிபர் குத்திக் கொலை செய்துள்ளார்.
Recommended Video
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சலங்குக்கார தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 52). இவரது மனைவி பூங்கொடி(48). இவர்களுடைய மகள் மீனா (26). இவருக்கும், சோனங்குப்பத்தை சேர்ந்த வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி நம்புராஜ் (30) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரியா (3), ஜான்சி (1) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நம்புராஜ், மீன்பிடி தொழில் செய்து வருகிறார். கடந்த ஓராண்டாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று குழந்தை ஜான்சிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட, மீனாவும், அவரது தாய் பூங்கொடியும் அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றிருக்கின்றனர். கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நம்புராஜ், முதலில் பேச்சுக் கொடுத்து, பின்பு திடீரென பின்பக்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பூங்கொடியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா அவரை தடுக்க முயன்ற போது, நம்புராஜ் மீனாவின் கழுத்திலும் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில், தாய்-மகள் இருவரும் நடுரோட்டிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். ஆனால், தனது ஒரு வயது குழந்தையை அவர் ஒன்றும் செய்யவில்லை.
சிறிது நேரத்திலேயே பூங்கொடியும், மீனாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான பூங்கொடி, மீனா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நம்புராஜை தேடி வருகின்றனர்.