ஊர்ந்து போக நான் என்ன பாம்பா... பல்லியா? நடந்து போய்தான் முதல்வரானேன் - போட்டு தாக்கும் இபிஎஸ்
நான் ஊர்ந்து எல்லாம் போகவில்லை நடந்து போய்தான் முதல்வரானேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கடலூர்: நான் தமிழக மக்களின் ஆசியுடன் இந்த பதவியில் இருக்கிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். நான் ஊர்ந்து போய் பதவியை வாங்கவில்லை; நடந்துபோய் தான் பதவி வாங்கினேன் என்று கூறியுள்ள முதல்வர், ஊர்ந்து செல்ல நான் பல்லியா? பாம்பா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி, மூன்றாவது அணி, நான்காவது அணி என களமிறங்க, நாம் தமிழர் கட்சி ஒரு பக்கம் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
பத்தாண்டு காலத்திற்கு பிறகு ஆட்சியில் அமர நினைக்கிறது திமுக. ஆட்சியை மூன்றாவது முறையாக தக்கவைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது அதிமுக.

ஸ்டாலின் பிரச்சாரம்
சட்டசபைத் தேர்தல் பிரச்சார களத்தில் ஆளும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் மு.க ஸ்டாலின். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பேசும் ஸ்டாலின், முதல்வர் பதவியை பெற எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார் என்றும் பேசி வருகிறார்.

போனார்
முதல்வர் பதவியை வாங்கும் போது எடப்பாடி பழனிச்சாமி, தவழ்ந்து போனார் என்றும் ஊர்ந்து போனார் என்றும் கூறி விமர்சனம் செய்தார். அந்த வீடியோக்கள் இப்போதும் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது என்றும் கூறி பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின்.

எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா இறந்த பின்னர் கட்சி உடைந்து போகும் அதன் பின்னர் ஆட்சி மாறி விடும் என்று திமுகவினர் எண்ணி இருந்தார்கள் ஆனால் இப்படி ஒரு விவசாயி வருவேன் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னார்.

ஊர்ந்து போகவில்லை
நான் தமிழக மக்களின் ஆசியுடன் இந்த பதவியில் இருக்கிறேன். ஸ்டாலின் அவர்களே, நான் ஊர்ந்து போய் பதவியை வாங்கவில்லை; நடந்துபோய் தான் பதவி வாங்கினேன் என்று சொன்னார். ஊர்ந்து செல்ல நான் என்ன பாம்பா? பல்லியா என்றும் கேள்வி எழுப்பினார்.

ஏமாற்ற முடியாது
ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு போன்றவற்றை கொண்டு வந்தது திமுக. ஆனால் அவர்கள் குறை கூறுவது அதிமுகவை தான். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் கையெழுத்திட்டார். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்படியே பல்டி அடித்து விட்டனர் என்று சொன்னார். யாரை ஏமாற்ற இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. பழைய காலம் மாதிரி விவசாயியை ஏமாற்றி ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள் அது ஒருபோதும் நடக்காது என்று சொன்னார்.












Click it and Unblock the Notifications