நாடாளுமன்ற தேர்தல்.. சிதம்பரம் தொகுதிக்கு மீண்டும் அடி போடும் திருமா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
கடலூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுவேன் என்று தொல் திருமாவளவன் கடலூரி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் நாடளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில், தற்போதே அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளையும் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும் இலைமறைக்காயாய் பேசத்தொடங்கிவிட்டனர். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சிதம்பரம் மக்களவை தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் தற்போது சிதம்பரம் தொகுதி எம்.பியாகவே உள்ளார். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போராடி வெற்றி பெற்றிருந்தார். சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரனை விட 3,219 வாக்குகள் கூடுதலாக பெற்று திருமாவளவன் வெற்றி பெற்றிருந்தார். அதாவது 5,00,229 வாக்குகளை பெற்று இருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் சிதம்பரம் தொகுதியை திருமாவளவன் குறி வைத்து இருப்பது அவரது பேட்டி மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சிதம்பரம் தொகுதியில் தான் மீண்டும் நான் போட்டியிட இருக்கிறேன். இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. நடராஜர் கோவிலில் நடக்கும் பிரச்சினைகளுக்கு அரசும் சட்டமும் சொல்வதற்கு தீட்சதர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
கோவிலில் நடக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். திரையுலக நட்சத்திரங்களை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்யும் நிலை உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் சினிமா நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆந்திராவில் என்டிஆர் அரசியலுக்கு வந்தார். ஆனால் மற்ற மாநிலங்களில் எந்த சூப்பர்ஸ்டாரும் வரவில்லை. சினிமாவில் இருக்கும் செல்வாக்குடன் அரசியலுக்கு வந்துவிடலாம் என மற்ற மாநிலத்தில் யாரும் செயல்படவில்லை.
இந்த விமர்சனங்களைத்தான் நான் முன்வைத்தேனே தவிர நடிகர் விஜய்க்கு எதிராக விமர்சனங்களை நான் முன் வைக்கவில்லை. இது பொதுவான விமர்சனம். பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம். திரைத்துறையில் நடிப்பவர்களை முதல்வராக தேடும் நிலை தமிழகத்தில் மட்டுமே உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதை நான் எதிர்க்கவில்லை. வரவேற்கிறேன்" என்றார்.
திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாலும் திமுக கூட்டணியில் அவருக்கு அங்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது தேர்தல் நெருங்கும் போது கூட்டணியில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே திருமாவளவனின் விருப்பம் நிறைவேறுமா? இல்லையா? என்பது தெரியும்.












Click it and Unblock the Notifications