நைசா ஜெயலலிதா பக்கம் திருப்பிவிட்ட கே.எஸ்.அழகிரி “கொள்கை வேறு கூட்டணி வேறு.. ஒண்ணும் கேக்க முடியாது”
கடலூர்: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி இன்று போராட்டம் நடத்தி வருகிறது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் பங்கேற்றார்.
தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பேரறிவாளன் விடுதலையை ஆதரிப்பது குறித்துப் பேசிய கே.எஸ்.அழகிரி, கொள்கை வேறு. கூட்டணி வேறு எனத் தெரிவித்தார்.
மேலும், "போர் என ஒன்று வந்தால் பலர் இறக்கத்தான் செய்வார்கள் என சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசினார். அது அவர்களது கொள்கை" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை
உச்சநீதிமன்ற தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். அதேநேரம், காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.
கொலைக் குற்றவாளிகள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்திருந்தார்.
அறப்போராட்டம்
பேரறிவாளன் விடுதலை தொடர்பான உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.
அதன்படி சிதம்பரத்தில் இன்று காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
எல்லோருக்கும் குடும்பம் இருக்கிறது
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "உச்சநீதிமன்றம் பேரறிவாளனை குற்றவாளி இல்லை எனக் கூறி விடுதலை செய்யவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தியதால்தான் நீதிமன்றம் விடுவித்து இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை. ஒரு சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ராஜீவ் காந்தியோடு சேர்த்து 9 போலீசார் உள்ளிட்ட 17 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தலைவர் ராஜீவ் காந்திக்கும் குடும்பம் இருக்கிறது.
மனுநீதிச் சோழன் பூமி
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் மனநிலையை நான் நன்கு அறிவேன். அதுபோல அனைவருக்கும் தாய், மனைவி, குழந்தைகள் உள்ளனர், தாய், மனைவி, குழந்தை போன்ற உறவுகள் உள்ளனர். அவர்கள் மனநிலையையும் நாம் பார்க்க வேண்டும். சமூகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? கன்றுக்குட்டி மீது தேரை ஏற்றியது தவறு எனக் கூறி தனது மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த பூமி இது.
நியாயமற்ற செயல்
கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? இது நியாயமற்ற செயல். ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளன் மிக முக்கிய குற்றவாளி என ஆதாரங்களை தெரிவித்ததாக அந்த விசாரணை அதிகாரி தெரிவித்திருக்கிறார். தமிழக சிறைகளில் இதுவரை 600 பேர் 700 பேர் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஏன் யாரும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.
அவரவர் கொள்கை
மேலும் பேசிய கே.எஸ்.அழகிரி, எங்களது கூட்டணிக் கட்சிகள் நிலைப்பாட்டில் மாறுபடுகிறார்கள் என்பதற்காக எங்களது கொள்கைகளைப் பற்றி அவர்கள் ஏன் என்று கேட்கப்போவதில்லை. அவர்கள் கொள்கைகளைப் பற்றி நாங்களும் பேசப் போவதில்லை. கொள்கை வேறு. கூட்டணி வேறு. போர் என ஒன்று வந்தால் பலர் இறக்கத்தான் செய்வார்கள் என சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசினார். அது அவர்களது கொள்கை. அதுபோல் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையில் யாரும் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.