இப்ப போஸ்டர், பேனர் எல்லாத்துலயும்....தேர்தலுக்கு பிறகு பதவி.. '2-ம் போர்வாள்' துரைவையாபுரி 'பராக்'
சென்னை: தன்னுடைய மகன் துரைவையாபுரி தேர்தலில் போட்டியிடமாட்டார்; மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ கூறிவருகிறார். ஆனால் வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான போஸ்டர்கள், பேனர்களில் துரைவையாபுரி படத்தை தவறாமல் மதிமுக நிர்வாகிகள் இடம்பெற செய்துவிடுகின்றனர்.
திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து மதிமுக எனும் தனி கட்சி தொடங்கியவர் வைகோ. அதனால் மதிமுகவில் வாரிசு அரசியல் வராமல் இத்தனை ஆண்டுகாலம் கவனமாக இருந்து வருகிறார் வைகோ.
ஆனால் அண்மைகாலமாக மதிமுக நிர்வாகிகள் இல்ல நிகழ்வுகளுக்கு துரை வையாபுரி தவறாமல் அழைத்து செல்லப்படுகிறார். இதன் அடுத்த கட்டமாக திமுகவில் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது போல மதிமுகவின் இளைஞரணி செயலாளர் பதவியை வைகோ மகன் துரைவையாபுரிக்கு தர வேண்டும் என்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வைகோ நிராகரிப்பு
இருப்பினும் வைகோ, என் மகன் தாயகம் பக்கமே வரமாட்டார் என கூறினார். சட்டசபை தேர்தலில் துரை வையாபுரி போட்டியிட வாய்ப்பிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் நம்மிடம் தகவல் தெரிவித்தனர். அதனையும் நாம் பதிவு செய்திருந்தோம்.

போஸ்டர்களில் துரை வையாபுரி
கடந்த 2 நாட்களாக இந்த செய்தியை வைகோ திட்டவட்டமாக மறுத்தும் வருகிறார். அதேநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் மதிமுகவின் கட்சி நிகழ்ச்சிகளுக்கான பேனர்கள், போஸ்டர்கள் அனைத்திலும் துரை வையாபுரியின் படமும் இடம்பெற்று கொண்டிருக்கிறது. வழக்கமாக இதனை வைகோ அனுமதிக்கமாட்டார். ஆனால் தற்போது வைகோவும் இதை மவுனமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

தேர்தலுக்கு பின் ஒரு திட்டம்
அதேநேரத்தில் துரை வையாபுரி குறித்த கேள்விகளுக்கு, தேர்தலுக்கு பின் நடைபெறும் பொதுக்குழுவில் ஒரு திட்டத்தை அறிவிக்கப் போகிறேன் என இடைவிடாமல் வைகோ கூறி வருகிறார். சட்டசபை தேர்தலுக்கு பின்னர் துரை வையாபுரிக்கு கட்சியில் மிக முக்கிய பதவி கொடுக்க இருப்பதையே வைகோ இப்படி மறைமுகமாக சொல்லி வருகிறார் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.

வருகிறார் துரை வையாபுரி
நாம் ஏற்கனவே எழுதியதைப் போல மதிமுக இளைஞரணி செயலாளர் பதவியை துரை வையாபுரிக்கு கொடுத்து, அந்த அணிக்கு தனியே ஒரு அலுவலகத்தையும் உருவாக்கி தரும் திட்டமாகவும் அது இருக்கலாம் என்கின்றனர் மதிமுக நிர்வாகிகள். ஆகையால் துரை வையாபுரி எனும் புதிய அரசியல்வாதி அதாவது மதிமுகவினரின் வரிகளில் சொல்வதானால் '2-ம் போர்வாள்' துரைவையாபுரி தமிழக அரசியல் களத்துக்கு வருவது உறுதி என்பதையே இந்த நிகழ்வுகள் சுட்டிகாட்டுகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications