மைக் செட் பண்ணி வைக்க மாட்டியா? நான் எப்படி பேசுறது! வட்டாட்சியரை வெளுத்து வாங்கிய அமைச்சர் கணேசன்!
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மீட்டிங்கிற்கு மைக் செட் பண்ணி வைக்காத வட்டாட்சியரை அமைச்சர் சி.வி.கணேசன் வறுத்தெடுத்திருக்கிறார்.
மைக் எங்கய்யா.. நான் எப்படி பேசுறது.. வேண்டுமென்றே என்னை அவமானப்படுத்த திட்டமிட்டியா என அந்த அதிகாரியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார் அமைச்சர் கணேசன்.
மேற்கொண்டு பேசினால் வம்பு என்பதால், சாரி சார் என்ற ஒற்றை வார்த்தையோடு முடித்துக்கொண்டு அந்த வட்டாட்சியர் அமைதியாக நின்றுகொண்டார்.

கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடனான சந்திப்பு கூட்டம் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது. மழை வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விருத்தாச்சலம் வட்டாரத்திற்குட்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அமைச்சர் டென்ஷன்
இந்தக் கூட்டத்தில் பேச மைக் இல்லாததை கண்டு டென்ஷனான அமைச்சர் கணேசன், கூட்டத்துக்கு ஏற்பாடுகளை கவனித்துக்கொண்ட வட்டாட்சியரை அழைத்து மைக் எங்கய்யா.. நான் எப்படி பேசுறது.. வேண்டுமென்றே என்னை அவமானப்படுத்த திட்டமிட்டியா என அனைவர் முன்னிலையிலும் வறுத்தெடுத்து விட்டார். அமைச்சர் கணேசன் இந்தளவுக்கு டென்ஷன் ஆவார் என எதிர்பார்க்காத அந்த வட்டாட்சியர் ஒரு நிமிடம் ஆடிப்போனார்.

மைக் செட்
எவ்வளவு முக்கியமான கூட்டம் இது, மைக் செட் பண்ணி வைக்க மாட்டியா என மீண்டும் தனது கோபத்தை அந்த வட்டாட்சியரிடம் வெளிப்படுத்தினார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் அங்கு மைக் செட் செய்யப்பட்டு ஸ்பீக்கர் பாக்ஸ் வைக்கப்பட்டது. ஆனால் அமைச்சர் கணேசனுக்கு கோபம் தீர்ந்தபாடில்லை. இதைப் பார்த்த உயர் அதிகாரிகள் அமைச்சரை சமாதானம் செய்து ஒரு வழியாக வட்டாட்சியரை காப்பாற்றினர்.

கவனக் குறைவு
அமைச்சர் பங்கேற்கும் மீட்டிங்கிற்கு மைக் செட் செய்து வைக்காததற்கு காரணம் வட்டாட்சியரின் கவனக்குறைவா அல்லது சிறிய மீட்டிங் ஹால் என்பதால் மைக் தேவைப்படாது எனக் கருதினாரா எனத் தெரியவில்லை. மொத்தத்தில் விவகாரம் வில்லங்கமாகி வட்டாட்சியரை அமைச்சர் திட்டும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications