அரசுப் பள்ளியில் வாய்ப்பாடு ஒப்பித்த அமைச்சர் கணேசன்! வைத்த கண் வாங்காமல் பார்த்த திமுகவினர்!
கடலூர்: அரசுப் பள்ளியில் ஆய்வு நடத்தச் சென்ற அமைச்சர் கணேசன் 16ஆம் வாய்ப்பாட்டை கடகடவென்று மாணவர்கள் முன்னால் ஒப்பித்ததை கண்டு அவருடன் சென்ற திமுக நிர்வாகிகள் அசந்து போனார்கள்.
''அண்ணன் கணக்கில் புலியாக இருக்கிறாரே'' என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை அவர்கள் பாராட்டினர்.
இதனிடையே தன்னைப் போலவே வாய்ப்பாடு ஒப்பித்த மாணவர் ஒருவருக்கு ரூ.1000 பரிசாக அளித்து ஊக்கப்படுத்தினார் அமைச்சர் கணேசன்.
நீட் முடிவுகள் வெளியாவதில் தாமதம்.. பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் கிராமத்திற்கு சென்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், அங்கிருந்த அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் ஆய்வு நடத்தினார். சத்துணவை சுவைத்துப் பார்த்த அவர், வகுப்பு அறைகளில் மாணவர்கள் கீழே அமர்ந்திருந்ததை கண்ட அவர், தனது சொந்த நிதியில் 40 டெஸ்க் பென்ச் வழங்குவதாக உறுதியளித்தார்.
வாய்ப்பாடு
மாணவர்களிடம் வாய்ப்பாடு குறித்து கேட்ட அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் 16ஆம் வாய்ப்பாட்டை கடகடவென்று ஒப்பிக்க ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளில் யாருக்கு 16 ஆம் வாய்ப்பாடு தெரியுமோ அவர்கள் முன்னால் வந்து நின்று ஒப்பிக்கலாம் என அழைப்பு விடுத்தார். பலரும் தயங்கிய நிலையில் மாணவர் ஒருவர் எழுந்து சென்று 16ஆம் வாய்ப்பாட்டை பார்க்காமல் கடகடவென்று ஒப்பித்தார்.
ரூ.1000 பரிசு
இதையடுத்து அந்த மாணவனை அழைத்து பாராட்டிய அமைச்சர் கணேசன் சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ.1,000 பணத்தை எடுத்து வாய்ப்பாடு ஒப்பித்த மாணவனுக்கு பரிசாக அளித்து ஊக்கப்படுத்தினார். மாணவன் வாய்ப்பாடு ஒப்பித்தது சரி, அமைச்சர் வாய்ப்பாடு ஒப்பித்ததை கண்டு அவருடன் சென்ற திமுக நிர்வாகிகளும், அதிகாரிகளும் வியந்து போனார்கள். ''அண்ணன் கணக்கில் புலியாக இருக்கிறாரே'' என அவரை பாராட்டினார்கள்.
திட்டக்குடி தொகுதி
திட்டக்குடி தொகுதி தனது சொந்த தொகுதி என்பதால் ஊரில் இருக்கும் போதெல்லாம், தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு ஒரு விசிட் அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் அமைச்சர் கணேசன். அந்த வகையில் தான் ராமநத்தம் கிராமத்திற்கும் அவர் ஆய்வுக்காக சென்றிருந்தார்.