"கருணாநிதி பிறந்தநாளை ‘சிறப்பா’ கொண்டாடினால்தான்.." - அமைச்சரின் பேச்சால் உடன்பிறப்புகள் ஷாக்!
கடலூர் : முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோருக்கே அடுத்த மாதம் நடைபெறும் ஒன்றிய பகுதி உட்கட்சி தேர்தலில் பொறுப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வடலூர் தனியார் மண்டபத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கு வாய், கை அடக்கம் தேவை. அனைவரிடமும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

வாய், கை அடக்கம் தேவை
இந்தக் கூட்டத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கு வாய், கை அடக்கம் தேவை. அனைவரிடமும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். கடந்த ஆட்சியாளர்களின் செயல்பாட்டால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிதி தட்டுப்பாட்டையும் சரி செய்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது.

விரைவில் அதுவும் நிறைவேற்றப்படும்
ஆட்சிக்கு வந்தபின் திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றது. ஆனால் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இதுவரை கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதான் மக்கள் மத்தியில் பெரும் பேச்சாக இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம் விரைவில் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

கருணாநிதி பிறந்தநாள்
ஏழை, எளிய மக்களுக்கான முதல்வராக செயல்பட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவருடைய பிறந்தநாள் வருகின்ற 3-ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதனை நாமும் கொண்டாட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத்திலும், நகரப் பகுதியிலும், பேரூராட்சிகளிலும் வீதி வீதியாக கருணாநிதியின் படத்தை திறந்து வைத்து மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்.

சிறப்பாக கொண்டாடினால் பதவி
அடுத்த மாதம் ஒன்றியப் பகுதி உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கருணாநிதி பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவதைப் பொறுத்துத்தான் பதவிகள், பொறுப்புகள் வழங்கப்படும். அனைத்து சமூகத்தினரும் எனக்கு வேண்டப்பட்டவர்கள்தான். கடலூர் மாவட்டத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும். எனவே அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.

தொண்டர்கள் அதிர்ச்சி
கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவோருக்கு பதவி என அமைச்சர் பேசியுள்ளது தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகமாக பணம் செலவு செய்து கருணாநிதி பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடுபவர்களுக்குதான் பதவி என அமைச்சர் இவ்வளவு ஓப்பனாகவே சொல்கிறாரே என உடன்பிறப்புகள் கமென்ட் அடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications