தொழிலாளர்கள் கோரிக்கையை நிராகரித்த என்.எல்.சி.. போராட்டம் தொடரும் என ஜீவா தொழிற்சங்கம் அறிவிப்பு
கடலூர்: பணி நிரந்தரம் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த 7 நாட்களாக என்.எல்.சி. ஜீவா தொழிற்சங்க ஒப்பந்த தொழிலாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனால் போராட்டம் தொடரும் என ஜீவா தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிக்காக மேல் வளையமாதேவி பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் புதிய பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை கடந்த 26-ந்தேதி என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியது. விளைநிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டு பரவனாறுக்கு மாற்றுப்பாதை வெட்டும் பணி நடந்தது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற என்.எல்.சி. அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் 20 போலீசார் காயமடைந்தனர். இதனால், கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசும், என்.எல்.சி நிர்வாகம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்.எல்.சி நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் என்.எல்.சி அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபக்கம் இருக்க , பணி நிரந்தரம், சம்பளம் உயர்வு உள்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த 7 நாட்களாக என்.எல்.சி. ஜீவா தொழிற்சங்க ஒப்பந்த தொழிலாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய தொழிலாளர் நல ஆணையத்தில் என்.எல்.சி நிர்வாகம் மற்றும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொழிலாளர்கள் கோரிக்கையை தற்போதைக்கு ஏற்க முடியாது என்று என்.எல்.சி நிர்வாகம் கூறியது. ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக 2026-வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று என்.எல்.சி கூறியது. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று ஜீவா தொழிற்சங்க சிறப்பு செயலாளர் சேகர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications