என்.எல்.சி நிலம் எடுப்பு ... பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய மர்ம நபர்கள்.. காவல்துறை விசாரணை
கடலூர்: என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிக்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் நேற்றிரவு 3 பேருந்துகள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கல்வீசியவர்கள் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிக்காக மேல் வளையமாதேவி பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் வியாழக்கிழமையன்று போராட்டம் நடைபெற்றது. மாலை நேரத்தில் பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கற்கள் வீசப்பட்டதில் 16 அரசு பேருந்துகள் சேதம் அடைந்தன.

காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட நிலையில், கிராமப் பகுதிகளுக்கான இரவு நேர பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. கிராமங்களிலேயே இரவு நேரத்தில் தங்கி, காலையில் இயக்கப்படும் பேருந்துகளையும், பணிமனைக்கு திரும்ப போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டிருந்தது.
இரவு நேரத்தில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் கடலூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் குழந்தைகளுடன் காத்திருந்தனர். பொதுமக்களின் சிரமத்தை அறிந்த காவல்துறையினர் மாற்று வாகனங்களை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். இரவு நேரத்தில் அரசு பேருந்துகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம் போல் அனைத்து பகுதிகளுக்கு நேற்று காலை முதல் பேருந்து சேவை தொடங்கியது. முக்கிய சாலைகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிராமப் புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் காவல்துறையினர் அனுமதி பெற்று இயக்கப்பட்டன. ஒரு சில பேருந்துகள் தாமதமாக இயக்கப்பட்டதாக பயணிகள் குற்றஞ்சாட்டினர். இதனிடையே நேற்றிரவும் 3 பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. பேருந்து மீது கல்வீசிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.











Click it and Unblock the Notifications