என்எல்சி விவகாரம்.. நிலம் கையகப்படுத்தும் திட்டம் இல்லை.. எம்ஆர்கே பன்னீர்செல்வம் உறுதி!
கடலூர்: என்எல்சி நிறுவனத்திற்காக புதிதாக நிலம் எதுவும் கையகப்படுத்தப்படாது என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதேபோல் என்எல்சி நிறுவனத்திற்காக ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என்றும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்காக விவசாயிகளிடம் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசியல் கட்சியினர் சொல்லி வந்தனர்.
இதற்காக அண்மையில் எம்எல்சி சார்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டத்தில் விவசாயிகள் அனுமதிக்கப்படாததும் விவாதத்தை ஏற்படுத்தியது.

பாமக நடைபயணம்
இதனிடையே என்எல்சி நிறுவனம் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் பிரச்சனையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கடலூரில் 2 நாள் நடைபயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல் கூடிய விரைவில் என்எல்சி நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசே கூறியுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

வேல்முருகன் கோரிக்கை
அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், என்எல்சி நிறுவனம் சார்பாக பொதுமக்கள், விவசாயிகளிடம் எடுத்த, எடுக்கப்பட உள்ள நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும், வீட்டுமனைக்கு வகைப்பாடு வித்தியாசமின்றி ஒரு செண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மாற்றுமனை குறைந்தபட்சம் 20 செண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விசிக வலியுறுத்தல்
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தரப்பில், என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்க பணிக்கு இடம் கொடுப்பவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும், வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனால் கடலூர் மாவட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்க விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியது.

நிலம் கையகப்படுத்தப்படாது
இந்த நிலையில் பாமக எம்எல்ஏ-க்கள் சதாசிவம் மற்றும் சிவக்குமார் ஆகியோர் என்எல்சி விவகாரம் தொடர்பாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். அப்போது பாமக எம்எல்ஏ-க்கள் தரப்பில், விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தரப்பில் கூறுகையில், என்எல்சி-க்காக புதிதாக நிலம் எதுவும் கையகப்படுத்தப்படாது என்றும், ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications