பண்பாட்டை காத்த பண்ருட்டி! விநாயகர் ஊர்வலத்தில்.. முஸ்லிம்கள் செயலால் நெகிழ்ந்த பக்கதர்கள்!
கடலூர்: தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலைகள் அனைத்தும் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலும் இதேபோல சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியின் போது இஸ்லாமியர்கள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடு முழுவதும் கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் இடங்களில் சிலைகளை வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,950 சிலைகளுக்கும், சென்னையில் 1,800 மற்றும் கன்னியாகுமரியில் 1,650 சிலைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றன. குறைந்தபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 102 சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மொத்தமாக மாநிலம் முழுவதும் சுமார் 38,600 சிலைகள் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 3,000 சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
வைக்கப்பட்ட சிலைகள் தற்போது நீர் நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் பொது இடங்களில் சுமார் 1,373 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இவை தேவனாம்பட்டினம், பரவனாறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் கரைகள் உள்ளிட்ட 12 குறிப்பிட்ட இடங்களில் கரைக்கவும் அனுமதியளிக்கப்பட்டிருந்தன. இவற்றில் 1,310 சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன. மீதமுள்ளவை இன்று கரைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்ற பக்தர்களுக்கு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இனிப்பு மற்றும் தண்ணீர் கொடுத்து வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டபோது மக்கள் பழங்கள் மற்றும் பூக்களை கொண்டு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிள்ளையார் சிலையுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
அப்போது பக்தர்களுக்கு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இனிப்பையும், தண்ணீர் பாட்டிலையும் வழங்கினர். இதை பெற்றுக்கொண்ட பக்தர்கள் பரஸ்பர அன்பை பரிமாறிக்கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழா கலவரமாக மாற்றப்படுவதாக வடமாநிலங்களிலிருந்து தொடர்ந்து செய்திகள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் வரவேற்பளித்தது மக்களிடையே பாராட்டை பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications