கதறிய கடலூர்! பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை.. அத்து மீறிய போலீஸ்கார தந்தை! போக்சோவில் கைது
கடலூர்: கடலூரில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, காவலர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மகளுக்கு தந்தையே பாலியல் கொடுமை நிகழ்த்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் 14 வயது சிறுமி புகார் ஒன்றை கொடுத்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த கடலூரை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க காவலர் ஒருவரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கின்றனர்.

14 வயது சிறுமியளித்த புகாரில் கூறியிருப்பதாவது, "கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் நான் 9ம் வகுப்பு படித்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக என்னுடைய தந்தையின் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. என்னிடம் தகாத முறையில் நடந்துகொள்கிறார். எனக்கு யாரிடம் புகார் அளிப்பது என்று தெரியவில்லை. எனவே தங்களிடம் புகார் கொடுத்திருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கடலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தந்தையான ஆயுதப்படை காவலர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
கடலூரில் சிறுமிகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டு 11 வயது சிறுமியை 57 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல கடந்த ஆண்டு 17 வயது மாணவியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியிருந்தார்.
மற்றொரு சம்பவத்தில் 17 வயது கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கர்ப்பமாக்கியதாக, அரசு பேருந்து டிரைவர் ஒருவர் கடந்த 6 தினங்களுக்கு முன்னர் போக்சோ வழக்கில் கடலூரில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தொடர்ந்து போக்சோ வழக்குகளின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதால் இதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications