அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு.. கடலூர் போலீசார் அதிரடி.. பின்னணி என்ன?
கடலூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு. கடலூர் போலீசார் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக, 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடலூர் லோக்சபா தொகுதியில் இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, தனது தொகுதி தவிர, மற்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக இன்று கடலூரில் பிரசாரம் மேற்கொண்டார் அண்ணாமலை.
கடலூரில் உள்ள முதுநகர் பகுதியில் திறந்த வேனில் தொண்டர்கள் மத்தியில் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் அண்ணாமலை. அப்போது மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்து பேசிய அண்ணாமலை, தங்கர் பச்சானுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும், பிரதமர் கூறிய 400 எம்.பிக்களில் தங்கர் பச்சானும் ஒருவர் என்றும் பேசினார்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடலூர் லோக்சபா தொகுதி பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், அண்ணாமலை, பாஜக மற்றும் பாமக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அனுமதி இன்றி பிரசாரம் செய்தது, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக அண்ணாமலை உள்ளிட்ட 5 பேர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இன்று சிதம்பரத்தில் அண்ணாமலை பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. திடீரென தங்கர் பச்சான் கேட்டுக்கொண்டதால் அண்ணாமலை கடலூரில் ஒரு பகுதியில் பிரச்சாரம் செய்துள்ளார். அனுமதி இன்றி அங்கு அண்ணாமலை பிரச்சாரம் செய்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட்டுள்ளது.












Click it and Unblock the Notifications