கடலூர் சிறையில் அதிரடி ரெய்டு.. நூற்றுக்கணக்கில் குவிந்த போலீஸால் பரபரப்பு
கடலூர்: கடலூர் மத்திய சிறையில் நூற்றுக்கணக்கில் குவிந்த போலீஸார் அதிரடி ரெய்டில் இறங்கினர். இதில் புகையிலைப் பொருட்கள், தீப்பெட்டிகள் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயுள் கைதி, தண்டனை கைதி, விசாரணை கைதிகள் தண்டனை என பலரும் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பெருமளவில் விதிமுறைகளுக்குப் புறம்பாக பல்வேறு பொருட்களின் நடமாட்டம் இருப்பதாக புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தன.

இந்த நிலையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீஸார் மத்திய சிறைச்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வில் புகையிலை பொருட்கள், தீப்பெட்டிகள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர் போலீஸார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வேறு ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதா என தகவல் வெளியாகவில்லை. வழக்கமான சோதனையாக இருந்தாலும் கூட இந்த ரெய்டின் பின்னணிக்கு வேறு காரணமும் கூறப்படுகிறது.
கடந்த மாதம் கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல இங்கு அடுத்தடுத்து கைதிகள் மரணமடைந்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் திடீர் ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications