வேண்டுமென்றே அல்லது விபத்து? சிதம்பரம் நடராஜர் கோவில் தீபாராதனையில் காவலர் காயம்! பரபரப்பு
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சீதர்கள் ஏந்தி வந்த தீப்பந்தம் பட்டு போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ள நிலையில் தீட்சிதர்கள் வேண்டுமென்றே காவலர் மீது தீ வைத்தனரா? என்பது பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்திப்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவில் தான் ‛பூலோக கைலாயம்' என போற்றப்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் நடப்பது வழக்கம். இதில் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் தான் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மேளதாளம் முழங்கிட வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் ஓதிட கோவிலில் இருந்து நடராஜர், சிவகாமசுந்திரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் வீற்றிருக்க பக்தர்கள் ‛சிவ.. சிவா' கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் முடிந்த பிறகு சாமிகள் இறக்கப்பட்டு கிழக்கு கோபுரம் பகுதியில் வரும்போது அங்குள்ள மக்கள் மற்றும் வியாபாரிகள் நடராஜர் மற்றும் சிவகாம சுந்தரிக்கு தீபாராதானை காட்டுவது வழக்கம்.

அந்த வகையில் அங்கு கடை வைத்திருக்கும் பாலகுரு என்பவர் தீபாராதானை காட்டும்போது அவருக்கும், கோவில் தீட்சிதர்களுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அசம்பாவிதங்களை தடுக்க பாலகுருவின் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதையடுத்து பாலகுரு தீபாராதனை காண்பிக்க தயாராக இருந்தார். அப்போது நடராஜர் முன்பு காட்டும் தீப்பந்தத்தை தீட்சிதர்கள் பொதுமக்கள் மற்றும் போலீசாரை நோக்கி காண்பித்து பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் பிரகாஷ் தீக்காயமடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே தான் தீபாராதனையின்போது நடராஜர் முன்பு காட்டும் தீப்பந்தத்தை தீட்சிதர்கள் பொதுமக்கள், போலீசாரை நோக்கி காட்டியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
தீட்சிதர்கள் வேண்டுமென்றே இப்படி செய்தனரா? இல்லாவிட்டால் கூட்ட நெரிசலில் இப்படி நடந்ததா? என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி கூறுகையில், ‛‛நடந்த சம்பவம் உண்மை. இதுதொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளோம்'' என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications