பாமக தொண்டரை 10 போலீசார் தாக்கினர்.. அடக்குமுறைகளால் எங்களை கட்டுப்படுத்த முடியாது.. ராமதாஸ் ஆவேசம்!
கடலூர்: நெய்வேலி என்.எல்.சி முற்றுகை போராட்டத்தின்போது பா.ம.க.வினர் மீதான போலீசாரின் தடியடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க போராட்டம் தொடரும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிர்வாகம், விளை நிலங்களை அழித்து நிலம் கையகப்படுத்தியதைக் கண்டித்து இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போரட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதில் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தின் நிறைவில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து பா.ம.கவினர் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவை. மண்ணைக் காக்க அறவழியில் நடத்தப்படும் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க அரசும், காவல்துறையும் முயன்றால் அவர்களுக்கு தோல்வியே கிடைக்கும்.
காவிரிப் பாசனப் பகுதிகளின் அங்கமான சேத்தியாத்தோப்பு பகுதியில், நன்றாக விளைந்து கதிர்விடும் நிலையில் உள்ள நெற்பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு அழித்து நிலங்களை கைப்பற்றிய என்.எல்.சி நிறுவனம் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையையும், அத்துமீறலையும் மனசாட்சியுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்.எல்.சி நிறுவனத்தின் அத்துமீறலைக் கண்டித்து தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை எடுத்த முடிவின் அடிப்படையில் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி என்.எல்.சி நுழைவாயிலில் அறப்போர் நடத்தப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட போதிலும், போராட்டம் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பேசி முடித்த பிறகு என்.எல்.சியை முற்றுகையிட அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.கவினர் முயன்ற போது, அதை காவல்துறை அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், என்.எல்.சி நிறுவனத்தின் ஏவலர்களாக மாறி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களையும், அவருடன் சென்ற பா.ம.கவினரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதனால், பதற்றம் அதிகரித்த நிலையில், பா.ம.க தொண்டர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது தான் நிலைமை மோசமடைய காரணம் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு தொண்டரை பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சூழ்ந்து கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினார்கள். அவரது ஆடைகள் கிழித்தெறியப்பட்டன. அந்தக் காட்சிகள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப் பட்டன. அதைத் தொடர்ந்தே பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராகவும், மண்ணையும், மக்களையும் காப்பதற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தைக் கையாள்வதில் காவல்துறையினரின் அணுகுமுறையும், அத்துமீறலும் கண்டிக்கத்தக்கவை. இத்தகைய சீண்டல்களின் மூலம் பா.ம.க போராட்டத்தை அடக்கி விட முடியாது.
பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்திருப்பது என்.எல்.சி என்ற ஒற்றை நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டும்; புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும்; இவை அனைத்திற்கும் மேலாக கடலூர் மாவட்ட மண்ணையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக நடத்தப்படும் போராட்டம் ஆகும். இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றி கிடைக்கும் வரை பா.ம.க.வின் போராட்டம் தொடரும்.

மக்களின் உணர்வுகளை மீறி அவர்களின் மண்ணைப் பறிக்க முயன்றால் என்ன நடக்கும்? என்பதற்கு மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் மற்றும் சிங்கூர் அனுபவங்கள் தான் சான்று. அந்த அனுபவத்தில் இருந்து தமிழ்நாடு அரசும், என்.எல்.சி நிறுவனமும் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், மண்ணின் மகத்துவம் குறித்தும், மக்களின் உணர்வுகள் குறித்தும் எதையும் அறியாத என்.எல்.சியும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் உணவு வழங்கும் பூமித்தாயை எந்திரங்களைக் கொண்டு பிளந்தெறிந்த காட்சியை சகித்துக்கொள்ள முடியாது. இத்தகைய அத்துமீறல்களுக்கு தமிழக அரசு துணைபோகக்கூடாது.
தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிட்ட நிலையில் என்.எல்.சி நிறுவனம் இனி தேவையில்லை. உடனடியாக அந்த நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட மக்களின் விருப்பம் ஆகும். இதை தமிழக அரசு புரிந்து கொண்டு மக்களின் பக்கம் நிற்க வேண்டும். மாறாக என்.எல்.சியின் அத்துமீறல்களுக்கு துணை போகக் கூடாது.
மீண்டும், மீண்டும் நான் கூற விரும்புவது என்னவென்றால் பாட்டாளி மக்கள் கட்சி அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பா.ம.க.வை கட்டுப்படுத்த முடியாது. வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. இறுதி வெற்றி கிடைக்கும் வரை அறவழியில் போராட்டம் தொடரும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications