சேலம் டூ கடலூர்... புயல்-மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஸ்டாலின் சந்திப்பு..!
கடலூர்: புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்திப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்.
இன்று காலை சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அவர், சென்னை திரும்பாமல் நேராக கடலூர் சென்றுள்ளார்.
அங்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு உணவு வழங்கிய ஸ்டாலின், நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

சேதம் அதிகம்
தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கடலோர மாவட்டங்களான கடலூர், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களில் சேதம் சற்று அதிகமாக காணப்படுகிறது. விளைநிலங்களில் வெள்ளநீர் புகுந்ததால் விவசாயிகள் நிற்கதியாக நிற்கும் அவலம் உருவாகியுள்ளது.

உணவு
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் புயல் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்காக இன்று அங்கு சென்றுள்ளார். கடலூர் மாவட்டம் பரதம்பட்டு என்ற இடத்தில் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். இதைத் தொடர்ந்து போர்வை, பெட்ஷீட், உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் கொடுத்து உதவினார்.

கடலூர் மாவட்டம்
இதனிடையே இதற்கு முன்னதாக சேலத்தில் புதிய விவசாய சட்டங்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு மதிய உணவு கூட சாப்பிடாமல் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு விரைந்தது குறிப்பிடத்தக்கது.

சுற்றுப்பயணம்
கடந்த மார்ச் மாதம் முதல் காணொலி மூலமே நிர்வாகிகள் சந்திப்பு, கட்சி நிகழ்ச்சிகளை கவனித்து வந்தார் ஸ்டாலின். இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய வேகத்தோடு களப்பணிக்கு முழுமையாக திரும்பியிருக்கிறார் ஸ்டாலின். தொடர்ந்து இனி சுற்றுப்பயணத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications