அண்ணாமலை ஒரு ஊசி வெடி! கொளுத்தி போடுவார்.. வெடிக்கிறதானு பார்க்க மாட்டார்! கே.எஸ்.அழகிரி கிண்டல்!
கடலூர் : பாஜக தலைவர் அண்ணாமலை ஊசி பட்டாசு போன்றவர் எனவும், ஒரு வெடியை கொளுத்தி போட்டு விடுவார், அவ்வளவுதான் அது வெடிக்கிறதா? வெடிக்கலையா? என்று கூட பார்க்க மாட்டார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது சோனியா காந்தியை அலைக்கழிக்கும் செயல் எனக்கூறியும், இதைக் கண்டித்தும் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
இதனை கண்டித்து கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்

கே.எஸ். அழகிரி
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி," நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமலாக்கத்துறை இரண்டாவது நாளாக விசாரணைக்கு அழைத்து இருக்கிறார்கள். இது ஜனநாயக ரீதியாக, சட்டரீதியாக, தார்மீக ரீதியாக தவறு என்பது எங்கள் கருத்து. இன்றைக்கு மோடி அரசு, அரிசி, தயிர், பால் என அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரி விதித்திருக்கிறார். மக்கள் கஷ்டப்படும்போது அரிசியை இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற திட்டம் நாட்டில் வந்தது. அண்ணா தான் முதல்முறையாக அரிசி விலையை குறைத்தார். தற்போது அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் அரிசிக்கு மோடி ஜிஎஸ்டி வரி விதிக்கிறார். இதனால் அரிசி விலை அதிகரிக்கும். இது கொடுமையான விஷயம்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் ஒரு ஆளுநர் இருக்கிறார். அவர் ஆளுநர் வேலையை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறார். அவர் திராவிடத்தை பற்றியும், சனாதனத்தை பற்றியும் பேசுகிறார். அது அவருடைய பணி அல்ல. ஆளுநர் மாநிலத்தில் நடைபெறும் விஷயங்களை கவனிக்க வேண்டும். அதில் அவருக்கு மாற்றுக் கருத்து இருந்தால் முதலமைச்சர் அழைத்து கருத்து சொல்ல வேண்டும்., முதலமைச்சரை தவிர்த்து வேறு யாரோடும் அவர் கருத்து பரிமாற்றம் செய்யக்கூடாது. அதற்கு ஆளுநருக்கு உரிமை இல்லை. பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் செல்கிறார். இது தமிழக அரசுக்கு தெரியவில்லை.

எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
நாடாளுமன்ற அவையில் தங்கள் கருத்துக்களை சொன்னார்கள் என கூறி 4 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 534 பேர் இருக்கின்ற அவையில் 4 பேர் எப்படி அவையை நடத்த முடியாமல் போய்விடும். நாடாளுமன்றம் என்பது பேசுவதற்கான இடம்தான். நாடாளுமன்றத்தில் தான் எல்லா கருத்துகளையும் பேச முடியும். சொல்ல முடியும்.

பேனா நினைவுச் சின்னம்
முன்னாள் முதல்வர் கலைஞருக்கு 80 கோடி ரூபாய் செலவில் வங்காள விரிகுடா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதில் எந்த தவறும் இல்லை. தமிழ் சமூகத்தில் மக்களை தட்டி எழுப்பிய வலிமையான தலைவர் கலைஞர். 3000 கோடி ரூபாய்க்கு சிலையை வைத்தவர்கள்தான் இது தவறு என்று குறை சொல்கிறார்கள். இது பொறாமையில் சொல்லப்படும் கருத்துக்கள்.

ஒரு ஊசி வெடி
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஊசி வெடி மாதிரி. ஒரு வெடியை கொளுத்தி போட்டு விடுவார். அவ்வளவுதான். அது வெடிக்குதா. வெடிக்கலையா என்று கூட பார்க்க மாட்டார். இதுவரை எவ்வளவு குற்றச்சாட்டுகளை சொல்லி இருக்கிறார். ஒன்றைக் கூட அவர் நிரூபிக்கவில்லை. நிரூபிப்பதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. அதன் பிறகு அதைப் பற்றி அவர் பேசுவதும் இல்லை" என கூறினார்.












Click it and Unblock the Notifications