கள்ளக்குறிச்சி வன்முறையில் ஆசிரியர்களின் பட்ட சான்றிதழ்களும் எரிப்பு.. வேறு வேலை தேட முடியாமல் அவதி!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஏற்பட்ட வன்முறையில், மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில் ஆசிரியர்களின் பட்டச் சான்றிதழ்களும் எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளியில் வேலைக்குச் சேரும்போதே பட்டச் சான்றிதழ்கள் உட்பட கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும், பள்ளி நிர்வாகம் வாங்கி வைத்திருந்துள்ளது. இந்த வன்முறையில், அவையும் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ள நிலையில், தங்களுக்கும் உடனே சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கியது 2 ஹார்ட் டிஸ்க்! பறந்த 5 டிரோன்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு.. எஸ்ஐடியிடம் மாட்டிய ஆதாரம்?
பள்ளியில் வன்முறை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற பிளஸ் 2 மாணவி சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில், மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்தன. அந்தப் பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவத்தில் வாகனங்கள் எரிக்கப்பட்டன. வகுப்பறைகளுக்கும் இருக்கைகளுக்கும் தீ வைக்கப்பட்டன. கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டன.
சான்றிதழ்களும் தீயில் நாசம்
இந்த பெரும் கலவரத்தால் பள்ளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 3,800 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த மாணவர்களின் சான்றிதழ்களும் எரிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்துள்ளன.
பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
தீயில் கருகி மாணவர்களின் சான்றிதழ்கள் சேதமடைந்த நிலையில், வருவாய்த்துறை மூலம் மீண்டும் சான்றிதழ் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க வருவாய்த்துறையுடன் இணைந்து விரைவில் சிறப்பு முகாம்,பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் விரைவில் வகுப்புகள் என நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர்களின் சான்றிதழ்களும்
இந்நிலையில், அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பட்டச் சான்றிதழ்களும் எரிந்து சாம்பலாகி உள்ளது தெரியவந்துள்ளது. அந்தப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியில் சேரும்போது, அவர்களின் கல்விச் சான்றிதழ்களையும், பட்டச் சான்றிதழ்களையும் பள்ளி நிர்வாகம் வாங்கி வைத்திருந்துள்ளது.
தீயில் கருகி
பள்ளியில் நடந்த வன்முறையில், மாணவர்களின் சான்றிதழ்களோடு, பள்ளி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களும் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. சான்றிதழ்கள் இல்லாததால் வேறு எங்கும் வேலை தேடக் கூட முடியாத நிலைக்கு அந்தப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
Recommended Video
ஆசிரியர்கள் கோரிக்கை
பள்ளி மூடப்பட்டுள்ள சூழலில், எப்போது பள்ளி மீண்டும் இயங்கும் என்பது தெரியவில்லை என்பதால், வேறு பள்ளியில் வேலை தேடலாம் என்றாலும், சான்றிதழ் இல்லாததால் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சான்றிதழ்களின் நகல்கள் அடிப்படையில் புதிய சான்றிதழ்களை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளியின் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.