அரசு மருத்துவமனையில் குழப்பம்.. உறவினர்களிடம் உடல்களை மாற்றி ஒப்படைத்த ஊழியர்கள்.. கடலூரில் ஷாக்!
கடலூர்: கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்(வயது 59) .கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஒரே சமயத்தில் உயிரிழப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஜாகிர் உசேன் உயிரிழந்தார். இதேபோல் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம்(51). கொரோனா தொற்று ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவரும் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இருவரும் ஒரே சமயத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.

அடக்கம் செய்தனர்
இந்த நிலையில் நேற்று காலை இவர்கள் இருவரது உறவினர்கள் உடல்களை பெற்றுக் கொள்ள அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஜாகிர் உசேன் உறவினர்கள், பேக் செய்யப்பட்ட உடலை உசேனின் உடல் என்று நினைத்து, அந்த உடலை புவனகிரி அருகே உள்ள பெருமத்தூர் கிராமத்தில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்தனர்.

மருத்துவமனை செய்த தவறு
ஆறுமுகத்தின் உடலை அவரது உறவினர்கள் அங்கு இருந்து வாங்கி சென்று உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யும் வேளையில் பார்த்தபோது அது ஆறுமுகம் இல்லை என்பது தெரியவந்தது. மருத்துவமனை செய்த தவறால் ஆறுமுகத்திற்கு பதிலாக ஜாகிர் உசேனின் உடலை அங்கு வைத்திருந்தது தெரியவந்தது.

நடவடிக்கை எடுக்கப்படும்
இதனை தொடர்ந்து ஜாகிர் உசேனின் உடலை புவனகிரி கொண்டுசென்று சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஆறுமுகத்தின் உறவினர்கள் ஒப்படைத்தனர். மாற்றி அடக்கம் செய்யப்பட்ட ஆறுமுகத்தின் உடலை தோண்டி எடுத்து தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடலை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications