பஸ்ஸை முந்த முயன்ற இளைஞர்கள்.. நடுரோட்டில் துடிதுடித்து.. நடந்த பயங்கர சம்பவம்
கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பஸ்ஸை முந்த முயன்ற போது, திடீரென வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தை பேட்டை பகுதியில் வசிப்பவர் சுரேஷ். இவரது மகன் அர்னால்டுக்கு 18 வயது ஆகிறது. டி.கீரனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் என்பவரது மகன் சேக்குவாரன் இவருக்கும் 18 வயது ஆகிறது.
அர்னால்டும் சேக்குவாரனும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு தங்களது சொந்த வேலையை முடித்து விட்டு ராமநத்தம் நோக்கி புறப்பட்டனர். இருசக்கர வாகனத்தை அர்னால்டு ஓட்டியிருக்கிறார்.

ராமநத்தம் அடுத்த வாகையூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று அர்னால்டு பைக்கில் வேகமாக கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளியின் பேருந்தை அர்னால்டு முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிரே பெண்ணாடம் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இதை அர்ணால்டு கவனிக்கவில்லை.திடீரென கார் அர்னால்டு மற்றும் அவரது நண்பர்கள் வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அர்னால்டும், சேக்குவாரனும் ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்தனர்.
இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அர்னால்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
சேக்குவாரனுக்கு பெரம்பலூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேக்குவாரன் வியாழக்கிழமை அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications