ஒடியாங்க ஓடியாங்க ஒரு கிலோ 30 ரூபாய் - கடலூரில் ஒரு மணி நேரத்தில் 1 டன் தக்காளி விற்பனை
கடலூரில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் ஒரு மணி நேரத்தில் 1 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
கடலூர்: ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் போட்டி போட்டிக்கொண்டு வாங்கிச் சென்றனர். கடலூரில் ஒரு மணி நேரத்தில் 1 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி இன்று ஏழைகளுக்கு எட்டாத கனியாகி விடும் நிலையில் உள்ளது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்த தக்காளி தற்போது கிடுகிடுவென உயர்ந்து நேற்றைய தினம் ஒரு கிலோ 150 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையிலுள்ள பண்ணை பசுமை கடைகளில் 79 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை குறைக்கும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா உள்ளிட்ட மழை இல்லாத மாநிலங்களில் இருந்து தாக்காளியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தக்காளி விலையை கட்டுப்படுத்த, குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் தக்காளி மற்றும் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலையில் தக்காளி விலை குறையத் தொடங்கியுள்ளது.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் தக்காளி கடலூரில் உள்ள உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும். தற்போது கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகள் சேதமடைந்ததால் இருந்து வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இந்நிலையில் கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் பகுதியில் தக்காளி விலை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக ஒரு கடையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது இதனை அறிந்த பொதுமக்கள் அக்கடையில் தக்காளியை வாங்க குவிந்தனர். சுமார் ஒரு மணி நேரத்தில் கடையில் இருந்த ஒரு டன் தக்காளிகள் அனைத்தும் விற்பனையானது. இதுகுறித்து தகவல் தகவலறிந்து தாமதமாக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதனிடையே சென்னை கோயம்பேட்டில் தக்காளி கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மதுரையில் கிலோ 90 ரூபாய்க்கும்,நீலகிரி மாவட்டம் கூடலூரில் கிலோ 55 ரூபாய்க்கும் ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே ஒரு கிலோ தக்காளியை 40 ரூபாய்க்கு தரத் தயார் என்று உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் கூறியுள்ளனர்.