உதயநிதி ஸ்டாலினுக்காக ஒரே நாளில் 622 நிகழ்ச்சிகள்! அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தடபுடல்!
கடலூர்: திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி நேற்று ஒரே நாளில் 622 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
பாதி இடங்களுக்கு தானும், பாதி இடங்களுக்கு தனது பிரதிநிதியாக தனது மகனும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளருமான கதிரவனையும் அனுப்பி வைத்துள்ளார்.

உதயநிதி பிறந்தநாள்: உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி கடலூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு குக்கிராமங்களிலும் திமுக கொடியை ஏற்றி வைத்து கட்சித் தலைமையின் கவனத்தை ஈர்த்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததை போல் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக கதிரவன் களமிறங்க வாய்ப்புள்ளதால் இப்போதே தொகுதியை உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒரு காரணமாக வைத்து வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக: கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நேற்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்துள்ளார். அதேபோல் கட்சி நிர்வாகிகள் மூலம் பிரியாணி, இனிப்பு, புத்தாடைகள், என அமர்க்களப்படுத்திவிட்டார். கருணாநிதி, ஸ்டாலின் பிறந்தநாளுக்கு இணையாக உதயநிதி பிறந்தநாளை கடலூர் கிழக்கு மாவட்டத்தில் கொண்டாடித் தீர்த்திருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.

ஒரே நாளில் 622 இடங்களில்: அதே போல் பிறந்தநாள் கொண்டாட்டத்தோடு சேர்த்து நீட் விலக்கு நம் இலக்கு என்ற முழக்கத்தின் கீழ் பொதுமக்களிடம் கையெழுத்துக்களும் பெறப்பட்டன. பொதுவாக இது போன்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ஒரு மாதத்திற்கு தினமும் 3 அல்லது 4 என்கிற வீதத்தில் நடத்துவார்கள். ஆனால் பன்னீர்செல்வமோ நவம்பர் 27ஆம் தேதி அன்றே 622 இடங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என உறுதியாக நின்று நடத்தியுள்ளார்.
அண்மையில் தான் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இல்ல மண விழா நடைபெற்று முடிந்தது. அந்த விழாவைக் காட்டிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை இன்னும் பன்மடங்கு உற்சாகத்துடன் கொண்டாடியிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications