நீ டெல்லியா? ஆனா உன் குடும்பம் கடலூர்லதானே இருக்கு! ராணுவ வீரருக்கு விசிக பிரமுகர் கொலை மிரட்டல்
கடலூர்: டெல்லியில் உள்ள ராணுவ வீரருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக ஆடியோ தீயாய் பரவி வருகிறது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கண்டித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் தனித் தமிழ்நாடு கேட்கும் திருமாவளவனுக்கு எனது கேள்வி இதுதான், தமிழகத்தில் தனியாக நின்று ஒரு வார்டில் உங்களால் வெற்றி பெற முடியுமா? ஒரு நாடு மாதிரி தனித் தமிழ்நாடு வேண்டும் என கேட்கிறீர்கள்.
இதற்குதான் நாங்கள் இந்திய ஒருமைப்பாட்டையும் தேச பக்தியையும் வளர்க்க வேண்டி ராணுவத்தில் சேர்ந்துள்ளோமா, நாட்டை இரண்டாகவும் மூன்றாகவும் பிளக்கத்தானா? இருக்கும் நாட்டை ஒன்று சேர்க்கத்தான் நாங்கள் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறோமே தவிர நாட்டை பிரித்து பார்ப்பதற்கு அல்ல.
உங்கள் சுயநிலத்திற்காக ஒரு தனிநாடு கேட்பீர்கள். அதன் பிறகு மாவட்டத்தை பிரித்து கொடு என்பீர்கள், எந்த தைரியத்தில் தமிழகத்தை தனிநாடாக மாற்ற வேண்டும் என கேட்கிறீர்கள்? தனி தமிழகம் கேட்கும் அளவுக்கு உங்களை இவ்வளவு தூரம் பேச வைத்தது ஆட்சியாளர்களின் தவறு ஆகும்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசுவீர்களா? நாட்டுப் பற்றை வளர்க்க போராடிக் கொண்டிருக்கும் நாங்கள் என்ன இளிச்சவாயன்களா? நீங்கள் ஒரு நாள் வீதியில் நின்று தனித்தமிழ்நாடு வேண்டும் என போராடி பாருங்கள். உங்கள் வாயால் வந்தே மாதரம் சொல்ல வைப்போம் என அந்த வீடியோவில் அந்த ராணுவ வீரர் கூறியிருந்தார்.
விசிகவில் சனாதனம் இல்லை.. வெடித்த பெண் நிர்வாகி.. மைக்கை பிடித்து திருமாவளவன் சொன்னது என்ன?
இந்த ராணுவ வீரரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கட்சியின் கடலூர் மாவட்டம் லத்தூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் மணிமாறன். இவர் மேற்கண்ட ராணுவ வீரருக்கு போன் செய்து எப்படி திருமாவளவனை தரக்குறைவாக பேசலாம்? நீ பேசியது தவறு, அவரிடம் மரியாதையாக மன்னிப்பு கேட்டுவிடு என்கிறார்.
அதற்கு அந்த ராணுவ வீரரோ, இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான்காரனின் துப்பாக்கிக்கும் பீரங்கியையும் காட்டினாலே நாங்கள் பயப்பட மாட்டோம். நீங்க போன் போட்டு மிரட்டினா நாங்கள் பயந்துடுவோமா? நான் யாருக்கும் பயப்படமாட்டேன், மன்னிப்பும் கேட்க மாட்டேன் என கூறியுள்ளார். அப்போது மணிமாறன், அந்த ராணுவ வீரரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
மணிமாறன், " நீ டெல்லியில் இருக்கிறாய், ஆனா உன் குடும்பம் எல்லாம் தமிழகத்தில்தானே இருக்காங்க. அவங்க உயிரோட இருக்கணும்னா மன்னிப்பு கேள் என மிரட்டுகிறார். அப்போது மணிமாறனுடன் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளும் ராணுவ வீரரை ஆபாச வார்த்தைகளால் வசைபாடுகிறார்கள். இந்த நிலையில் இந்த ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ராணுவ வீரர்களையே மிரட்டும் இந்த போக்கை கண்டித்து மணிமாறனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அத்துடன் ராணுவ வீரரை மிரட்டியதாக கூறப்படும் மணிமாறன் செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் தனியார் பள்ளியில் பணிபுரிந்தவர். அப்போது அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட புரட்சிமாறன்தான் இந்த மணிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.