சிதம்பரத்தில் மாபெரும் இழுபறிக்குப் பின் வெற்றியை ஈட்டிய திருமாவளவன்!
சிதம்பரம்: சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மிகப் பெரிய இழுபறிக்குப் பின்னர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது. அக்கட்சித் தலைவர் திருமாவளவன், சிதம்பரத்திலும் பொதுச்செயலாளர் ரவிக்குமார் விழுப்புரத்திலும் போட்டியிட்டனர்.
அதிமுக அணியில் இடம்பெற்ற பாமக செல்வாக்கு உள்ள இந்த இரு இடங்களும் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வாக்கு எண்ணிக்கை முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

நிலவரத்தை வெளியிட மறுப்பு
ஆனால் திடீரென வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை அதிகாரிகள் வெளியிட மறுத்தனர். இதனால் அதிகாரிகளுடன் திருமாவளவன் உள்ளிட்டோர் வாதிட்டும் பார்த்தனர்.

மக்கள் கடும் அதிருப்தி
திருமாவளவனின் வெற்றி அறிவிப்பை வெளியிடுவதில் ஏற்பட்ட வரலாறு காணாத தாமதம் மக்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது. சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் பானைச் சின்னத்தில் களம் கண்டார்.

என்ன காரணம்?
கிராமம் கிராமமாக சென்று தீவிரப் பிரச்சாரம் செய்த திருமாவளவன், நிச்சயம் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே. ஆனால் நேற்று வெற்றி அறிவிப்பை வெளியிடுவதில்தான் தேர்தல் ஆணையம் மிகப் பெரிய தாமதம் செய்தது. இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை.

ஆதரவாளர்கள் கொந்தளிப்பு
நள்ளிரவைத் தாண்டியும் முடிவு வெளிவராமல் இழுபறியாகபோய்க் கொண்டிருந்தது. திருமாவின் வெற்றியைப் பார்க்காமல் இந்த தேர்தல் முடிவு நிறைபெறாது என்ற ஏக்கத்தில் மக்களும் தூங்காமல் சமூக வலைதலங்களில் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

வெற்றி பெற்றார் திருமாவளவன்
ஒரு வழியாக திருமாவின் வெற்றியை தேர்தல் அதிகாரிகள் நள்ளிரவைத் தாண்டி வெளியிட்டனர். அதன்படி திருமாவளவன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை விட 3219 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications