கடலூர் மாவட்ட மக்களை பார்த்தால் எப்படி தெரியுது? ஆர்ப்பரித்த வேல்முருகன்! ஸ்தம்பித்த போக்குவரத்து!
கடலூர்: கடலூர் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் ரசாயன தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் கடலூர் மாவட்ட மக்களுக்கு பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக த.வா.க.தலைவர் வேல்முருகன் வேதனைத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கிய 5 நிறுவனங்கள், சிறிது காலம் மட்டும் பெயருக்கு நடத்தி விட்டு இப்போது நிலங்களை ரியல் எஸ்டேட் மனைகளாக மாற்றி விற்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடலூரில் வேல்முருகன் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. அந்தளவுக்கு ஒரு பெரும் கூட்டத்தை திரட்டி ரசாயன தொழிற்சாலை நிறுவனங்களை மிரள வைத்திருக்கிறார்.
இதனிடையே கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு வேல்முருகன் எழுதிய கடிதம் வருமாறு;
கடலூர் சிப்காட்: கடலூர் சிப்காட் வளாகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அங்கு இயங்கி வரும் ரசாயன தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றால் அப்பகுதியில் உள்ள ஆறுகள், குளம், கடல் நீர், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்தும் மாசடைந்துள்ளது. இந்நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்காமல் மேற்படி நீர் ஆதாரங்களில் நேரடியாக சட்டவிரோதமாக கலக்கச் செய்கின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் சாலை ஓரங்களிலும் கொட்டிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களின் உடல்நிலையும், சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும்: மேற்கூறிய நிறுவனங்கள் அனைத்திலுமே அவை தொடங்கப்பட்ட காலத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கொதிகலன்கள், ரியாக்டர்கள், சிம்னிகள் ஆகியவையே இதுவரையிலும் பயன்பாட்டில் உள்ளது. இதனால் இவை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறி கடலூர் மாவட்ட மக்களுக்கு பேரழிவை உருவாக்கும் அபாயம் உள்ளது. மேலும் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட 'சைமா' என்னும் சாயப்பட்டறை நிறுவனமும் தற்போது கடலூர் மாவட்டத்தில் செயல்படுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இவை தற்போதுள்ள அரசின் மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் விதிகளுக்கு மேற்கண்ட நிறுவனங்கள் அனைத்தும் முரணானவையாகும்.
லாப வெறி: ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தங்களது நேரடி கள ஆய்வின் மூலமாகவோ அல்லது நிபுணர் குழுவின் ஆய்வின் மூலமாகவோ மேற்படி தகவல்களை உறுதிசெய்து மேற்கண்ட நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், மேலும் சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் டாக்ரோஸ் நிறுவனத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் எத்தனாலை தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து பலகோடி ரூபாயை லாபமாக ஈட்டி உள்ளனர். அவர்களின் லாப வெறிக்காக மேற்கொள்ளப்பட்ட செயலால் அதை வாங்கி குடித்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மண்ணின் மைந்தர்களான மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்பிற்கு காரணமான அந்த நிறுவனத்தின் மீதும் அதன் உயரதிகாரிகள் மீதும் மாவட்ட காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
ஆசை வார்த்தைகள்: அதேபோல் NLC நிறுவனத்தால் அப்பகுதியில் நிலம், நிலத்தடி நீர் மற்றும் காற்றில் 250 மடங்கு அமிலத்தன்மை அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. NLC நிறுவனம் மின்சாரத்திற்காக நிலக்கரியை எரிக்கும் தற்போதைய முறையை மாற்றி மாற்று வழிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வழிகளை முயற்சிக்க வேண்டும். மேலும் அந்நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த மாவட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை ஆகிய ஆசை வார்த்தைகளை கூறி நிலங்களை கையகப்படுத்தி பல்லாண்டு காலமாக லாபத்தில் இயங்கி வருகிறது.
எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை: ஆனால் மேற்கண்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் இன்றுவரை அப்பகுதி மக்கள் பல்வேறு விதமான போராட்டங்களை செய்து வருகின்றனர். ஆனால் NLC நிறுவனம் தற்போது வரையில் புதிய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மேலும் NLC நிறுவன மருத்துவமனையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக (கொரோனா காலத்திலும்) பணிபுரிந்து வந்த சுமார் 50 செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் தற்போது நிறுவனத்தால் பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலர் NLC நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் மீண்டும் அங்கேயே பணிபுரிந்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சீர்கேடு: மேலும் நெல்லிக்குப்பத்தில் இயங்கிவரும் EID பாரி சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கச் செய்வதாலும் விளைநிலங்களில் கொட்டுவதாலும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும், விவசாயமும் முற்றிலுமாக அழியும் நிலை உள்ளது. மேலும் பரங்கிப்பேட்டையில் இயங்கிவரும் IL&FS அனல் மின் நிலையத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கும், அப்பகுதி கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கும் உள்ளாகியுள்ளது. எனவே இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ரியல் எஸ்டேட் மனைகளாக : குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி செயல்பட்டு வந்த கீழ்க்காணும் நிறுவனங்கள் சிறிது காலம் தங்களது உற்பத்தியை தொடங்கி செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது நிறுவனத்தை மூடி தங்களுக்கு சொந்தமாக உள்ள நிலங்களை ரியல் எஸ்டேட் மனைகளாக மாற்றி விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள DTCP அனுமதியையையும், பஞ்யாயத்து அனுமதியையும் ரத்து செய்து அந்நிலங்களை இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தேவைகளுக்கு பயன்படுத்திட அரசே கையகப்படுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
நிறுவனங்களின் பெயர்
1. கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட், காடாம்புலியூர் ஊராட்சி
2. டேனக்ஸ் பவர் ஜெனரேசன் லிமிடெட், மருங்கூர்
3. ஷோகன் பேப்பர் மில், காடாம்புலியூர்
4. நெய்சர் நிறுவனம் சேஷாயி நிறுவனம், வடலூர்
5. கங்கப்பா பேப்பர் மில், வடக்குத்து
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கோரிக்கை பேரணியை நடத்தி மாவட்ட ஆட்சியர் அவர்களின் மேலான நடவடிக்கைகாக இம்மனுவை தங்களிடம் அளிக்கிறோம்.
இம்மனுவின்மீது காலதாமதமின்றி விரைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கடலூர் மாவட்ட மக்களின் உயிரையும் வாழ்வாதரத்தையும் சுற்றுச் சூழலையும் இங்கு அழிந்துவரும் பள்ளுயிர் சூழலையும் காப்பாற்றிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications