கள்ளக்காதலுக்கு இடையூறு.. 12 வயது சிறுவனை கட்டி போட்டு உடலில் சூடு வைத்த தாயும் கள்ளக்காதலனும் கைது
கடலூர்: திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த பெற்ற மகனுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதை அடுத்து அந்த சிறுவனை மீட்டு அவரது தாயையும் கள்ளக்காதலனையும் போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் அடுத்த சூரப்ப நாயக்கர் சாவடியில் 12 வயது சிறுவனை அவரது தாய் கை கால்களை கட்டி போட்டு சூடு வைத்து கொடுமைப்படுத்துவதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் சிறுவனை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் சிறுவனின் தாய் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த சாந்தி தேவி, தந்தை ஹரிகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது. இதில் ஹரிகிருஷ்ணன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

நரம்பு கோளாறு
இந்நிலையில் சாந்தி தேவிக்கு காலில் நரம்பு கோளாறு காரணமாக தன்னை சித்த மருத்துவர் எனக் கூறிக் கொள்ளும் சிதம்பரத்தைச் சேர்ந்த சுகைல் அகமது என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கள்ளக்காதலனுடன் தங்கிய தாய்
இந்நிலையில் சிறுவன், சாந்தி தேவி, கள்ளக்காதலன் சுகைல்அகமது ஆகியோர் கடலூர் சூரப்பநாயக்கர் சாவடியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் சாந்தி தேவி சுகில்அகமது இருவருக்குமான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி அந்த சிறுவனை நாள்தோறும் அடித்தும் சூடு வைத்தும் உணவு கொடுக்காமலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

தொடர்ந்து கொடுமை
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்த சிறுவனை பெற்ற மகன் என்றும் பாராமல் சாந்திதேவி வெளியே அனுப்பிவிட்டார். இதனால் சிறுவன் செல்ல வழியின்றி இரண்டு மூன்று நாட்கள் பசியுடன் வீதிகளில் சுற்றித் திரிந்து பின்னர் மீண்டும் வீட்டிற்கு சென்ற போது இந்த கொடுமையே தொடர்ந்து நடைபெற்றது.

உடலில் சூடு
சிறுவனுக்கு ஆங்காங்கே சூடு இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த சிறுவனை அழைத்து விசாரித்த போது அவர்களிடம் நடந்தவற்றை கூறியதை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் விசாரணைக்காக வந்தனர்.

தாயும் கள்ளக்காதலனும் கைது
திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் சிறுவன் அவரது தாய் மற்றும் அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த சுகில் அகமது ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்று இருவர் மீதும் 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுவனை பாதுகாப்பாக குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஏற்கெனவே செஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2 வயது மகனை பெற்ற தாய் துளசியே கொடூரமாக தாக்கி அதை வீடியோ எடுத்து கள்ளக்காதலனுக்கு அனுப்பிய விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications