கட்டி 2 மணி நேரத்தில் கழற்றப்பட்ட தாலி.. போராடி மீண்டும் கட்டிக் கொண்ட கெட்டிக்கார பெண்!
தர்ணாவுக்கு பிறகு காதலனை திருமணம் செய்த கடலூர் பெண்.
கடலூர்: கட்டிய தாலியை 2 மணி நேரத்தில் கழட்டி கொண்ட, காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க கோரிய பெண்ணுக்கு திரும்பவும் கல்யாணம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிராமம் சாக்காங்குடி. இந்த கிராமத்தை சேர்ந்த சிலம்பொலியும், விருத்தாசலம் அடுத்த சின்னகண்டியாங்குப்பத்தை சேர்ந்த செல்லதுரையும் காதலர்கள். சிலம்பொலிக்கு வயது 25, செல்லதுரைக்கு வயது 28.
5 வருடங்களாக தீவிரமாக லவ் பண்ணினார்கள் இருவரும். ஆனால் வீட்டில் விஷயம் தெரிந்து எதிர்ப்பு ஆகிவிட்டது. இதனால் கடந்த 12ம் தேதி முதனை செம்பையனார் கோயிலில் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டனர்.

தாலியை கழற்றினார்
இந்த தகவல் செல்லதுரை வீட்டுக்கு பறந்தது. தாலி கட்டி 2 மணி நேரம் ஆகியிருக்கும். உடனே செல்லதுரையின் தாயார் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டது. இதனை கேள்விப்பட்ட செல்லதுரை, அதிர்ச்சி அடைந்து தாயை பார்க்க ஓடினார். கிளம்பும்போது, மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை கழற்றிவிட்டு,2 நாளில் எப்படியாவது வந்து கூட்டி கொண்டு போவதாக சொல்லிவிட்டு போனார்.

ஸ்டேஷனில் புகார்
ஆனால் வீட்டுக்கு போன செல்லதுரை திரும்ப வரவே இல்லை. சிலம்பொலியுடன் பேசுவதையும் தவிர்த்தார். இந்த நடவடிக்கையை பார்த்து ஷாக் ஆன சிலம்பொலி, இது சம்பந்தமாக கடந்த 17ம் தேதி விருத்தாசலம் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

தர்ணா போராட்டம்
ஆனால் போலீசார் புகாரை வாங்கி வைத்து கொண்டு மெத்தனமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் விரக்தி அடைந்த சிலம்பொலி, 2 நாட்களுக்கு முன்பு செல்லதுரையை பார்க்க அவரது வீட்டுக்கே சென்றார். ஆனால் வீடு பூட்டியிருக்கவும், வீட்டு முன்னாடியே உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சமாதானம்
தகவலறிந்து விருத்தாச்சலம் மகளிர் போலீசாரே விரைந்து வந்தனர். செல்லதுரையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி, ஒரு சுமூக முடிவும் எடுப்பதாக சொல்லி அவரை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசாரும் நேற்று செல்லதுரையை வரவழைத்து ஸ்டேஷனிலேயே பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

திரும்பவும் கல்யாணம்
ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு செல்லதுரை பெற்றோர் வரவில்லை. ஆனால் கிராமத்தின் முக்கியமான நபர்களும், சிலம்பொலி வீட்டு தரப்பினரும் கலந்து கொண்டனர். பிறகு ஒரு சுமூக முடிவு எட்டப்பட்டுது. இதையடுத்து, தெற்கு பெரியார் நகரில் உள்ள வண்ணமுத்து மாரியம்மன் கோயிலில் திரும்பவும் செல்லதுரை, சிலம்பொலிக்கு திருமணம் நடந்தது.












Click it and Unblock the Notifications